மக்களைப் பற்றி தப்புக் கணக்கு போட்டு விட்டோம்.. வருத்தப்படும் மிசோரம் முதல்வர்
அய்ஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளன. 26 தொகுதிகளில் வென்று மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பிடித்துள்ளது. ஆட்சியை இழந்த முதல்வர் லால் தன்வாலா மக்களை குறைத்து மதிப்பிட்டு விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாயன்று காலை முதலே எண்ணப்பட்டன. 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில், தொடக்கத்தில் முடிவுகளை பற்றிய நிலவரங்கள் வெளியாவதில் தாமதங்கள் ஏற்பட்டாலும் பின்னர் ஒவ்வொரு தொகுதிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்று மாறுபட்ட கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 ஆண்டுகள் அரியணையை கெட்டியாக பிடித்து வைத்திருந்த காங்கிரஸ் ஆட்சியை, மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது.
80 சதவீதம் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமருகிறது. காங்கிரசுக்கு ஒற்றை எண்ணிக்கையில் வெறும் 5 தொகுதிகள் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்துள்ளது.
இதையடுத்து, 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரியணையை இழந்துள்ளது. சுயேட்சைகள் 8 தொகுதிகளில் வென்றுள்ளனர். 39 தொகுதிகளிலும் களம் கண்ட பாஜக ஒரே ஒரு தொகுதியில் வாகை சூடி உள்ளது.
பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளதால், மிசோ தேசிய முன்னணி கட்சியினர் மாநிலம் முழுவதும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
தோல்வியை தொடர்ந்து முதலமைச்சரான லால் தன்வாலா, தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தோல்வி நாங்கள் எதிர்பாராதது என்றார். மிசோ தேசிய முன்னணியை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இமாலய வெற்றியை தொடர்ந்து மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா தலைமையிலான அக்கட்சியினர் ஆளுநர் கும்மணம் ராஜசேகரனை சந்தித்து முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆக மொத்தத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த அரசாங்கத்தையும், மிசோரம் மாநில மக்கள் நீடிக்க விரும்பவில்லை என்பதை, இந்த தேர்தல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு வாக்காளர்கள் மீண்டும் உணர்த்தி உள்ளனர்.