மிசோரம் சட்டசபை தேர்தல்:ராகுல் தீவிர பிரசாரம்- 39 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்- அக்கப்போர் நஹி?
ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான 39 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை இடையேதான் போட்டி. இம்மாநிலத்தில் பாஜகவும் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்றும் நாளையும் மிசோரமில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். மிசோரமில் பாதயாத்திரை மற்றும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்து வருகிறார் ராகுல் காந்தி.
இந்நிலையில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவித்தது. மிசோரம் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் லால்சவ்தா ஐஸ்வால் மேற்கு-III தொகுதியில் போட்டியிடுகிறார்.
மற்றொரு மூத்த தலைவர் லால்னுன்மாவியா சுவாங்கோ ஐஸ்வால் வடக்கு-I (ST) தொகுதியில் போட்டியிடுகிறார்.
மிசோரம் மாநிலத்தின் 5 சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 4 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது காங்கிரஸ். சிட்டிங் எம்.எல்.ஏ. கேடி ரோகாவுக்கு மட்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை காங்கிரஸ்.
இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 2 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்; சக்மா சமூகத்தை சேர்ந்த 2 பேரும் வேட்பாளர்களாக பட்டியலில் இணைந்துள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் 2008 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மிசோ தேசிய முன்னணி இம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.












Click it and Unblock the Notifications