மிசோரம் தேர்தல் 2023: வேலைவாய்ப்பின்மை, அதிகளவு கடன்.. மாநிலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன?
ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் வரும் 7ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தை பொறுத்தவரை அதிக அளவு கடனால் தத்தளித்து வருகிறது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக செமி பைனல் போல 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா, சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரமை பொறுத்தவரை 40 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை செல்வாக்காக உள்ளன. பாஜக பெயரளவில் உள்ளது. ஆனாலும் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அங்கம் வகிக்கிறது. கடந்த 1987 ஆம் ஆண்டு மிசோரம் மாநிலம் ஆனது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகிறது.
நிதி நெருக்கடி: தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முயன்று வருகிறது. ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன.
மிசோரத்தை பொறுத்தவரை கடுமையான நிதி நெருக்கடியிலும் தவித்து வருகிறது. மிசோரம் மாநில அரசுக்கு அதிக வருவாய் மது விற்பனை மூலம் கிடைத்தது. ஆனால், அந்த மாநிலத்தில் தற்போது மது விலக்கு அமலில் உள்ளது. இதனால், மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. அதேபோல பல பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மோசமாக உள்ளன. போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத சூழலும் உள்ளது.
அகதிகள்: பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று பெற்றோர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. மற்றொரு பக்கம் வேலை வாய்ப்பு இன்மை அதிகமாக உள்ளது. அரசு துறைகளில் வேண்டியவர்களுக்கு மட்டுமே பணி கிடைப்பதாக இளைஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இன்னொரு பக்கம் மிசோரம் மாநிலம் மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதியில் அமைந்து இருப்பதால் அங்கிருந்து ஊடுருவல்களும் அதிகமாக உள்ளது.
மியான்மர் நாட்டில் இருந்து அகதிகளாக பலரும் மாநிலத்திற்குள் ஊடுருவதும் அந்த மாநிலத்திற்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. அகதிகளாக வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளை அங்குள்ள சில அமைப்புகள் செய்து கொடுத்தாலும் அவர்களுக்கு போதிய வசதிகள் கிடைப்பது இல்லை. இப்படி பல்வேறு இன்னல்களையும் மாநிலம் எதிர்கொண்டு வருகிறது. இதனால், தேர்தல் முடிந்து புதிதாக அமையும் அரசாவது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications