மிசோரம்: 13 மையங்கள்.. 4,000 பேர்.. டிச.3-ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கைக்கான ஜரூர் பணிகள்!
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை டிசம்பர் 3-ந் தேதி எண்ணும் பணிக்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மிசோரம் வாக்கு எண்ணும் பணியில் 4,000 பேர் ஈடுபட உள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் காங்கிரஸ் இடையே மிக கடும் போட்டி உள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவும் களத்தில் இருக்கிறது. மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையக் கூடும் என கணித்துள்ளன. இருந்த போதும் மிசோரம் மாநிலத்தில் பாஜக இடம் பெறும் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்கின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.
இதனிடையே டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள். தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள்; ஆகையால் ஞாயிற்றுக்கிழமை அதாவது டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது; வேறு ஒரு தேதியில் வாக்குகளை எண்ண வேண்டும் என மிசோரம் மாநிலத்தில் அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ தேவாலய அமைப்புகள், என்.ஜி.ஓக்கள் வலியுறுத்தி உள்ளன.
ஆனால் இதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. மிசோரமில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை மொத்தம் 13 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணும் பணியில் 4,000 பேர் ஈடுபட உள்ளனர். மொத்தம் 399 மின்னணு வாக்கு இயந்திர மேஜைகள், 56 தபால் வாக்கு மேஜைகள் அமைக்கப்படுகின்றன. 13 மையங்களின் 40 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.












Click it and Unblock the Notifications