லீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர்
புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவைக்கு வராத எம்.எல்.ஏ.க்கள் அதற்கான காரணத்தை தன்னிடம் கூறி விடுப்பு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் நவீன் பட்நாயக்.
மேலும், சட்டப்பேரவைக்கு தாமதமாக வரும் எம்.எல்.ஏ.க்களை பற்றிய விவரத்தையும் தன்னிடம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் நவீன் பட்நாயக்.
இதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாது கலந்துகொள்வதோடு, அவை நடவடிக்கை முடியும் வரை இருந்து விட்டுச் செல்கின்றனர்.

5 முறை
ஒடிஸாவில் பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக 5-வது முறை பதவி வகிக்கிறார் நவீன் பட்நாயக். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவது இவரது சிறப்பியல்பு. மேலும், பழமைவாதங்களை புறந்தள்ளி முற்போக்கு சிந்தனையுடன் செயல்படக் கூடியவர் நவீன் பட்நாயக்.

நடவடிக்கை
இதனிடையே பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முறையாக பங்கேற்பதில்லை என்றும், முதலமைச்சர் இருக்கும் வரை அவையில் இருந்துவிட்டு அவர் சென்றவுடன் எம்.எல்.ஏ.க்களும் கலைந்துவிடுவதாக புகார் எழுந்தது. இது குறித்து பரிசீலித்த முதல்வர் நவீன் பட்நாயக், இனி மேல் 2 நாட்களுக்கு மேல் லீவு என்றால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. தன்னை சந்தித்து காரணத்தை விளக்க வேண்டும் என கறார் காட்டியுள்ளார்.

காலை 11.30 மணிக்கு
சட்டப்பேரவை யார் யார் எத்தனை மணிக்கு வருகிறார்கள் என்பதை வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டு, அதனை தினமும் காலை 11.30 மணிக்கு தன்னிடம் காட்டுமாறு கொறடா பிரமிளா மாலிக்கிற்கு நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

நவீன் எச்சரிக்கை
மேலும், சட்டப்பேரவையிலும், தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இனி கண்காணிப்பேன் எனத் தெரிவித்துள்ளார் நவீன் பட்நாயக். ஒடிஸாவில் மொத்தம் 147 தொகுதிகள் உள்ள நிலையில் 113 தொகுதிகள் பிஜு ஜனதா தளம் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications