உத்தரகாண்ட்டில் பாஜக எம்பி தருண் விஜய் மீது சரமாரி தாக்குதல்- படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிலுக்குள் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்,பி. தருண் விஜய் மீது ஒரு கும்பல் கற்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
உத்தரகாண்ட்டின் ஜவுன்சார் பகுதி தலித் மக்களை கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என தருண் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சக்ரதாவில் உள்ள சில்கூர் தேவதா கோவிலுக்கு தருண் விஜய் சென்றார். அவருடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தவுலத் குன்வாரும் சென்றிருந்தார்.

இருவரும் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது வெளியே இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கற்களை சரமாரியாக வீசி எறிந்தனர். இதில் தருண் விஜய் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில்கூர் தேவதா கோவிலில் ஏற்கனவே தலித்துகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தருண் விஜய் மீதான தாக்குதல், அவர் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என பிரசாரம் செய்ததால் நடத்தப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications