ரமலான் மாதத்தில் ஷஹர் செய்கையில் அதிர்ந்த காஷ்மீர், பாகிஸ்தான்: மக்கள் பீதி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருந்தது.
காஷ்மீரில் இன்று அதிகாலை 3.40 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டது.
புனித ரமலான் மாதத்தின் 12வது நாளான இன்று நோன்பு வைக்க முஸ்லீம்கள் ஷஹர் உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.
முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி காஷ்மீரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்த அந்த நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானிலும்:
பாகிஸ்தானின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத், ராவல்பின்டி, பெஷாவர், மலாகந்த், ஸ்வாட், லோயர் திர், அப்போத்தாபாத், மன்செஹ்ரா மற்றும் கில்கிட்-பால்திஸ்தான் பகுதியில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.