காவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்... காரணம் இதுதான்!!
Recommended Video
ஜெய்ப்பூர்: பிரதமர் மோடியின் சகோதரர் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலத் மோடி நேற்று ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜெய்ப்பூரில் உள்ள பக்ரு காவல் நிலையம் செய்திருந்தது. அவருடைய பாதுகாப்புக்காக இரண்டு போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரகலத் மோடியின் காரிலேயே செல்வதற்கு திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில், போலீஸ்காரர்களை தன் காரில் அழைத்துச் செல்வதற்கு பிரகலத் மோடி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அவர்களுக்காக தனி வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரினார்.
இதை வலியுறுத்தி ஜெய்ப்பூர்- அஜ்மீர் சாலையில் உள்ள பக்ரு காவல் நிலையத்தின் முன்பாக அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலைய அதிகாரிகள் சமாதானம் செய்தும் பலனில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பிரகலத் மோடியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், சட்ட நெறிமுறைகளின்படியே, போலீசார் உடன் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். அதற்குரிய ஆணையையும் காண்பித்தனர்.
இதையடுத்து, சமாதானம் அடைந்த அவர் தர்ணாவை கைவிட்டு, அந்த இரண்டு போலீஸ்காரர்களும் தனது காரில் அழைத்துச் செல்வதற்கு சம்மதித்தார். ஒருமணிநேரம் பிரகலத் மோடியின் தர்ணா போராட்டம் நீடித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications