பாரிகருக்கு பாதுகாப்பு துறை: பொன். ராதாகிருஷ்ணன், ஹர்ஷ்வர்தன் துறைகள் மாற்றம்
டெல்லி: முன்னாள் கோவா முதல்வர் மனோகர் பாரிகருக்கு பாதுகாப்பு துறையும், சுரேஷ் பிரபுவுக்கு ரயில்வே துறையும், அருண் ஜேட்லிக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையும், சுகாதாரத் துறையில் இருந்த ஹர்ஷ்வர்தனுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தார். 4 கேபினட் அமைச்சர்கள் உள்பட 21 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து மோடி அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிகருக்கு பாதுகாப்பு துறையும், பதவியேற்கும் முன்பு சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுரேஷ் பிரபுவுக்கு ரயில்வே துறையும், அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹரியானா தலைவர் பீரேந்தர் சிங்கிற்கு கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையும், மோடி, பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமான ஜெகத் பிரகாஷ் நட்டாவுக்கு சுகாதாரத் துறையும் வழங்கப்பட்டுள்ளது.
அருண் ஜேட்லி கூடுதலாக வகித்து வந்த பாதுகாப்புத் துறை பாரிகரிடம் அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தனுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் கூடுதலாக இருந்த கிராமப்புற வளர்ச்சித் துறை பீரேந்தர் சிங்கிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அருண் ஜேட்லி முன்பை போன்றே நிதி மற்றும் கார்பரேட் விவகாரத்துறைகளுடன் கூடுதலாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையையும் கவனிப்பார். அவருக்கு முன்னாள் ராணுவ வீரரான இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உதவியாக இருப்பார்.
ரயில்வே துறை அமைச்சராக இருந்த சதானந்த கவுடாவுக்கு ரவி சங்கர் பிரசாத் வகித்து வந்த சட்டத் துறை அளிக்கப்பட்டுள்ளது. ரவி சங்கர் பிரசாத்துக்கு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அளிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர சிங் தோமார் வகித்து வந்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர்(தனி பொறுப்பு) பண்டாரு தத்தாத்ரேயாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. தோமார் இரும்பு மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பதவியை தொடர்ந்து வகிப்பார்.
வடகிழக்கு பகுதி மேம்பாட்டு துறை ஜெனரல் வி.கே. சிங்கிடம் இருந்து ஜித்தேந்தர் சிங்கிடம் அளிக்கப்பட்டுள்ளது. வி.கே. சிங் புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட அவருக்கு ஏற்கனவே அளித்த துறைகளை கவனிப்பார். ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக்கிற்கு ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி துறையும், மகேஷ் சர்மாவுக்கு சுற்றுலா மற்றும் கலாச்சார துறையும் அளிக்கப்பட்டுள்ளது.
பிற இணை அமைச்சர்களான ராம் க்ரிபால் யாதவ்- குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையும், சான்வார் லால் ஜாட்டுக்கு நீர்வளம், நதிகள் மேம்பாடு, கங்கை சுத்தப்படுத்துதல் துறை, குந்தாரியாவுக்கு விவசாயம், கிரிராஜ் சிங்கிற்கு குறு, சிறு, நடுத்தர தொழில் துறையும், ஹன்ஸ்ராஜ் அஹிருக்கு ரசாயனம் மற்றும் உரத்துறையும், கத்தாரியாவுக்கு மனிதவள மேம்பாடும், ஜெயந்த் சின்ஹாவுக்கு நிதித் துறையும், ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையும், பாபுல் சுப்ரியோவுக்கு நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதித் துறையும், சாத்வி நிரஞ்சன் ஜோதிக்கு உணவு பதப்படுத்துதல் துறையும், விஜய் கம்ப்லாவுக்கு சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறையும் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் சாலை நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மலா சீதாரமான் நிதி மற்றும் கம்பெனித்துறை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மட்டும் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.