மத்திய அமைச்சரவையில் மாற்றம் ? இன்று அறிவிப்பு வெளியாகலாம்.. மோடி தீவிர ஆலோசனை !
டெல்லி: பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை. முதல் முறையாக பெரிய அளவில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் இகூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனிடையே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது குறித்து மோடியை பா.ஜ.க, தலைவர் அமித்ஷா சந்தித்து பேசினார். இதில் தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து துறை ரீதியாக ஆலோசனை நடத்தினார்.
இதில், மூத்த அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும், மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில் புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளவர்கள் மழைக்கால கூட்டத் தொடருக்கு தயாராக, போதிய அவகாசம் வேண்டும் என்பதால், மத்திய அமைச்சரவை இன்றே மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூத்த அமைச்சர்களின் துறை மாற்றப்படலாம் எனவும், சில அமைச்சர்கள் நீக்கப்படலாம் எனவும், சில இணை அமைச்சர்களுக்கு தனித்துறை ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா மாநில சட்டசபை தேர்தல்களை முன்வைத்து இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட இருக்கிறதாம். இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். உள்துறை, நிதித்துறை போன்ற முக்கிய இலாகாக்களில் மாற்றம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மூத்த அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பதற்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கும் அசோகா அரங்கமும் தயார் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications