மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு - 9 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்க
டெல்லி: மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சர்கள் காலை 10.30 மணிக்கு பதவியேற்கின்றனர். அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா,ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார்,ஹர்தீப் சிங் புரி,கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014 மே மாதம் பதவியேற்றது. இதுவரை 2 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 3வது முறையாக ஞாயிறன்று அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவையில் தற்போது 72அமைச்சர்கள் உள்ளனர். லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கையில் 15 சதவீதம் வரை அமைச்சர்களை நியமிக்கலாம். புதிய அமைச்சர்கள் 9 பேர் பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அரசில் 81 அமைச்சர்கள் இடம் பெற உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஞாயிறு மாலை சீனாவுக்கு புறப்படுகிறார். அதற்கு முன்பு ஞாயிறன்று காலை 10.30மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.