ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சர் மற்றும் துணைப் பிரதமர்...?
டெல்லி புதிய அரசு அமையப் போகிறது. 282 எம்.பிக்களை கையில் வைத்துக் கொண்டு அடுத்த அமைச்சரவையை இறுதி செய்து வருகிறார் மோடி. இதுதொடர்பான ஆலோசனைகள் சூடு பிடித்துள்ளன.
இன்னும் சில மணி நேரங்களில் அமைச்சர்களை இறுதி செய்து விடும் பாஜக என்று தெரிகிறது. இன்று மாலையில் குடியரசுத் தலைவரையும் சந்திக்கவுள்ளார் மோடி.
இந்த நிலையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும், யாருக்கு என்ன துறை கிடைக்கும் என்பது குறித்த ஒரு இறுதிக் கட்ட தகவல் பரவி வருகிறது. அதுகுறித்த ஒரு பார்வை...
உள்துறைக்கு ராஜ்நாத் சிங்.. இல்லாட்டி துணைப் பிரதமர்
ராஜ்நாத் சிங் அமைச்சரவையில் மோடிக்கு அடுத்த இடத்தைப் பெறுவார் என்று சொல்கிறார்கள். அவருக்கு உள்துறை அமைச்சர் பதவி தரப்படவுள்ளதாம். அவருக்குத் துணைப் பிரதமர் பதவியும் தரப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
சுஷ்மாவுக்கு ஏதாவது..
சுஷ்மா சுவராஜ் மோடியை ரொம்பவே உரசிப் பார்த்தவர். முறைத்துக் கொண்டவர். ஆனால் பாஜக பெற்ற வெற்றியைப் பார்த்து இப்போது ரொம்பவே இறங்கி வந்து விட்டாராம். முதலில் வெளியுறவுத்துறைதான் என்று பிடிவாதமாக இருந்தவர் இப்போது ஏதாவது முக்கியத் துறை கிடைத்தால் போதும் என்று சொல்கிறாராம்.
தோத்துப் போன ஜேட்லிக்கு நிதி
அதேபோல பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மூத்த தலைவர் அருண் ஜேட்லிக்கு நிதித்துறை கிடைக்கலாம் என்கிறார்கள்.
சத்ருகன் சின்ஹா.. எஸ்.எஸ். அலுவாலியா...வினோத் கண்ணா
நடிகர்கள் சத்ருகன் சின்ஹா, வினோத் கண்ணா மற்றும் எஸ்.எஸ். அலுவாலியா, ராஜீ்வ் பிரதாப் ரூடி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் அமைச்சர்களாகவுள்ளதாக கூறப்படுகிறது.
அமீத் ஷாவுக்கு என்ன...
மோடியின் நிழலாக பார்க்கப்படும் அமீத் ஷாவுக்கு மோடிக்குப் பக்கத்திலேயே இருப்பது போன்ற பதவி கிடைக்கும் என்கிறார்கள். இவர் தற்போது எம்.பி இல்லை. எனவே மோடி தனது வாரணாசி தொகுதியை வைத்தக் கொண்டு அமீத் ஷாவுக்காக வதோதாரவை ராஜினாமா செய்து அங்கு ஷாவை நிறுத்துவார் என்கிறார்கள்.
இவர்களுக்கும் பதவி...
அதேபோல முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங், நடிகை ஸ்மிருதி இராணி ஆகியோருக்கும் பதவி கிடைக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. ஸ்மிருதி ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர்.