காந்திநகர் தொகுதி அத்வானிக்குக் கிடைப்பது சந்தேகமே? மோடி குறி வைக்கிறார்..
டெல்லி: குஜராத்தின் காந்திநகர் தொகுதியை பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக விட்டுக் கொடுக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிடிவாதம் பிடித்து வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தின் வாரணசாமி மற்றும் குஜராத்தின் காந்திநகர் தொகுதிகளில் அவர் போட்டியிட விரும்புகிறார்.

ஆனால் இந்த இரு தொகுதிகளிலுமே எம்.பி.யாக இருப்பவர்கள் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள். வாரணாசி தொகுதி எம்.பியாக இருப்பவர் முரளி மனோகர் ஜோஷி. காந்திநகர் தொகுதி எம்.பி. அத்வானி.
ஏற்கெனவே வாரணாசி தொகுதியை விட்டுக் கொடுக்க முடியாது என்று முரளி மனோகர் ஜோஷி கூறிவிட்டார். ஆனால் மோடி விடுவதாக இல்லை. இப்போது அத்வானி தாம் காந்திநகர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடப் போவதாக கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளார்.
காந்திநகர் தொகுதியில் இருந்து 1991,98,99,2004,2009 ஆகிய 5 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அத்வானி. 1996ஆம் ஆண்டு காந்திநகர் தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.
இதனால் தாம் காந்திநகர் தொகுதியைவிட்டு கொடுக்க முடியாது என்பதுடன் மற்றொரு வாதத்தையும் அத்வானி முன்வைக்கிறார். பாகிஸ்தான் பிரிவினையின் போது கட்ச் பகுதிக்குத்தான் தமது குடும்பத்தினர் குடியேறி வாழ்ந்தனர். அங்கு தாம் போட்டியிட விரும்பினாலும் அது ரிசர்வ் தொகுதியாக இருப்பதால்தான் காந்திநகரில் போட்டியிட விரும்புகிறேன் என்கிறார்.
ஏற்கெனவே பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பதவிகளை ராஜினாமா செய்து கலகக் குரல் எழுப்பியவர்தான் அத்வானி. இப்போது தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மீண்டும் கலகக் குரலை எழுப்புவாரோ என்று பதைபதைக்கின்றனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications