12 ஆண்டுகளாக குஜராத் முதல்வர்.. நரேந்திர மோடி சாதனை
அகமதாபாத்: முதல்வராக தொடர்ந்து 12 ஆண்டுகளை பதவி வசித்து சாதனை படைத்துள்ளார் நரேந்திர மோடி.
குஜராத் முதல்வராக கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் நடைபெற்ற 3 சட்டமன்ற தேர்தல்களில் பாஜ அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் முதல்வராக நீடித்து வருகிறார். இன்றுடன் அவர் முதல்வர் பதவியில் 12 ஆண்டுகள் நிறைவு செய்கிறார்.
இதை முன்னிட்டு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

3 முறை வெற்றி
63 வயதானவரான நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று முறை பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

அபார வளர்ச்சி
கடந்த 12 ஆண்டுகளில் மோடியின் தலைமையில் குஜராத் மாநிலம் அபார வளர்ச்சி பெற்றிருப்பதாகவும், குஜராத்தின் வளர்ச்சி திட்டங்களை மற்ற மாநிலங்களும் பல நாடுகளும் பின்பற்றி வருவதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதச் சார்பின்மை
கடந்த 12 ஆண்டுகளாக குஜராத் அரசு அனைத்து தரப்பினரின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தியதே தவிர, குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தவரையும் திருப்திப்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை.

முன்னுதாரணமாக திகழும் குஜராத்
மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 1,000 பேர் உயிரிழந்தனர். அந்த கலவரத்தில் முதல்வர் மோடிக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குற்றமற்றவர் மோடி
ஆனால் கலவரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு அவர் குற்றமற்றவர் என உறுதிப்படுத்தியது.

எந்தக் கலவரமும் இல்லை
2002-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாநிலத்தில் எந்தவித கலவரமும் நடைபெறவில்லை என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் பல்வேறு சாதனை திட்டங்கள் அந்த செய்தி குறிப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரதமர் பதவியை நோக்கி
மாநில அரசியலில் சாதனை படைத்த நரேந்திர மோடியை கடந்த மாதம் பாஜக மேலிடம் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. 2014ம் ஆண்டு லோச்கபா தேர்தலை நரேந்திர மோடி தலைமையில் பாஜக சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications