பிரம்மாண்ட ஊர்வலம்- வாரணாசியில் நரேந்திர மோடி வேட்புமனுத் தாக்கல்!
வாரணாசி: பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் புடை சூழ பிரம்மாண்ட பேரணி நடத்தி பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உ.பியின் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

வதோதரா தொகுதியில் ஏற்கெனவே மோடி வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இன்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
முன்னதாக வாரணாசியில் பண்டிட் மதன் மோகன் மாளவியா, சுவாமி விவேகானந்தா உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் வாரணாசி ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக மோடி சென்றார்.
சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பேரணி எங்கும் அவரது ஆதரவாளர்கள் மோடியை வாழ்த்து முழக்கமிட்டு சென்றனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மோடி தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அவருடன் உத்தரப்பிரதேச மாநில பாஜக பொறுப்பாளர் அமித்ஷா, பாஜகவின் மூத்த தலைவர்கள் முக்தார் அப்பா நக்வி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மோடி, பாஜகதான் என்னை இங்கு வேட்பாளராக நிறுத்தியதாக உணர்ந்திருந்தேன். ஆனால் இப்போதுதான் கங்கை மாதாவே என்னை அழைத்து வந்து இங்கே நிறுத்தியிருப்பதை உணர்கிறேன். வாரணாசியை உலகில் உள்ள ஆன்மீக நகரங்களுக்குத் தலைநகரகாக உருவாக்குவோம். அதற்கான அத்தனை செயல்திட்டங்களும் உருவாக்குவோம் என்றார்.












Click it and Unblock the Notifications