முரளி மனோகர் ஜோஷி, மல்கோத்ரா, கல்யாண்சிங்... ஆளுநராகப் போகும் பாஜக தலைவர்கள்!!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்ட முரளி மனோகர் ஜோஷி, மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் 18 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. சில மாநிலங்களின் ஆளுநர் ராஜினாமா செய்யவும் முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் உள்துறை அமைச்சகம், எந்தெந்த மாநில ஆளுநர்களின் பதவிக் காலம் முடிவடைகிறது.. யார் யார் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படலாம் என்ற பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

அமைச்சரவை இடம் மறுப்பு
ஏற்கெனவே மோடி அமைச்சரவையில் 75 வயதுக்கு மேற்பட்ட பாஜக தலைவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது. அப்படி அமைச்சர் வாய்ப்பு மறுக்கப்பட்டோரை ஆளுநர்களாக்கிவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆளுநராகும் தலைவர்கள்
பாஜகவின் மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, லால்ஜி தாண்டன், கே.என். திரிபாதி, வி.கே. மல்கோத்ரா, கல்யாண்சிங், சாந்தகுமார், பி.சி. கந்தூரி ஆகியோரை ஆளுநராக்கலாம் என்று பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா ஆளுநர் ஜோஷி?
இவர்களில் முரளி மனோகர் ஜோஷியை மகாராஷ்டிரா மாநில ஆளுநராக்க முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

பதவிக் காலம் முடிவு
குஜராத் ஆளுநர் கமலா பெனிவாலின் பதவிக் காலம் நவம்பர் மாதம் முடிவடைகிறது. கர்நாடக ஆளுநர் பரத்வாஜின் பதவிக் காலம் இந்த மாதம் முடிவடைகிறது.

ஓரிரு நாளில் அறிவிப்பு
இப்படி ஒரு சில மாதங்களில் பதவிக் காலம் முடிய உள்ள ஆளுநர்களை மாற்ற வேண்டாம் என்றும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகக் கூடும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications