"அவசரத்தில்" வரலாறு படைக்கும் மோடி... 4வது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்?
டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் மீண்டும் ஒருமுறை அதுதொடர்பான அவசரச் சட்டத்தைப் பிரயோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே 3 முறை இந்த அவசரசச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
இதுவரை இப்படி எந்த அரசிலும் அதிக அளவில் ஒரு அவசரச் சட்டம் பிரயோகிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பின்னர் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை நான்காவது முறையாக கொண்டுவரவுள்ளதாம் மத்திய அரசு.
இதற்கிடையே நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட எஸ்.எஸ். அலுவாலியா தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 2 வார காலம் கால நீட்டிப்பு கோரியுள்ளது.
மழைக் காலக் கூட்டத் தொடருக்கு முன்பு
மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக அலுவாலியா குழுவின் அறிக்கை வராது என்று நம்பப்படுகிறது. எனவே நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிரயோகிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.
மே 31ல் மூன்றாவது முறையாக
கடந்த மே 31ம் தேதி மூன்றாவது முறையாக இந்த அவசரச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இப்படி அடுத்தடுத்து அவசரச் சட்டத்தைப் பிரயோகிப்பது வழக்கத்திற்கு விரோதமானது அல்ல என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு 15 சட்டங்கள்
இதற்கு முன்பு 15 அவசரச் சட்டங்கள் 2 அல்லது 3 அதற்கு மேலும் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் உதாரணம் காட்டப்படுகிறது.
6 மாத ஆயுள் காலம்
ஒரு அவசரச் சட்டத்தின் ஆயுள் காலம் என்பது 6 மாதங்களாகும். அதற்குள் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாவிட்டால் அவரசச் சட்டத்தை மீண்டும் பிரயோகிக்க முடியும்.
ஜூலை 21ல் தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சட்ட மசோதாவுக்கு காங்கிரஸும், அதன் ஆதரவுக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதலில் ஆதரித்த அதிமுக இப்போது எதிர்க்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.