நிலம் ஆர்ஜித மசோதாவுக்கு மீண்டும் அவசர சட்டம்- மத்திய அரசு முடிவு!!
டெல்லி: நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் 5-ந் தேதியுடன் காலாவதி ஆவதால் மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிலம் கையகப்படுத்த ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியில், இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நிலம் கையகப்படுத்தும் மசோதா லோக்சபாவில் மட்டும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் ராஜ்யசபாவில் ஆளும பாரதிய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அங்கு நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அக்கட்சிகளை சமாளிக்கும் பொறுப்பை மூத்த அமைச்சர்களிடம் பாரதிய ஜனதா ஒப்படைத்துள்ளது.
ராஜ்யசபாவில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றி விடுவது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்துள்ளது. இத் தொடரின் இரண்டாவது பாதி ஏப்ரல் 20-ந்தேதிதான் தொடங்குகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 5-ந் தேதியுடன் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் காலாவதி ஆகிறது.
இதனால் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது என மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக முடிவு செய்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டுமானால் இரு சபைகளில் ஏதாவது ஒன்று நீட்டிக்கப்பட வேண்டும். எனவே, ராஜ்யசபையை நீட்டிப்பு செய்வது என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications