இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகளை விட 1000 மடங்கு பெரிய சாதனை இது- மோடி பெருமிதம்
பெங்களூர்: மிகக் குறுகிய காலத்தில், மிகச் சிறிய பட்ஜெட்டில் நாம் வரலாறு படைத்துள்ளோம், முடியாதது என்று எதுவுமே கிடையாது என்பதை நிரூபித்துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப் பாதையில் நுழைந்த நிகழ்வை பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி கண்ட மோடி பின்னர் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், இன்று நமது பூமித் தாய், செவ்வாயைச் சந்தித்துள்ளார். "மாம்" மங்களைச் சந்தித்துள்ளது. இந்தியா வெற்றிகரமாக செவ்வாயை சென்றடைந்துள்ளது. வரலாறு படைக்கப்பட்டுள்ளது. முடியாது என்று கூறப்பட்டதை நாம் முடியும் என்று நிரூபித்துள்ளோம்.

எல்லைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளோம். நமது விஞ்ஞானிகள் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். நான் பெருமைப்படுகிறேன். நமக்கு இனி எல்லைகள் இல்லை. மாபெரும் சாதனையை நாம் படைத்துள்ளோம். இது மிகவும் குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்குரியது.
நமது கனவு நனவாகியுள்ளது. இந்த பொன்னான தருணத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டு மொத்த இந்தியர்களையும் நான் வாழ்த்துகிறேன்.
கற்பனைக்கும் எட்டாத தூரத்தை நாம் எட்டிப் பிடித்துள்ளோம். நம்முடைய விண்வெளித் திட்டங்கள் மிகவும் தெளிவானது என்பதை நிரூபித்துள்ளோம்.
3 ஆண்டுகளில் நாம் இதைச் சாதித்துள்ளோம். இது மாபெரும் சாதனையாகும். இந்த சாதனை மூலம் உலகின் 4வது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.
நமக்கு எதிராக அவநம்பிக்கைகள் எழுந்தன. உலகில் இதுவரை செவ்வாய்க்கான 51 பயணங்கள் நடந்துள்ளன. இதில் 21 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாம் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளோம்
ஒரு ஹாலிவுட் படத்துக்கான செலவை விட நாம் குறைந்த செலவில் இதைச் சாதித்துள்ளோம். நாம் செய்திருப்பது மிகப் பெரிய சாதனை. நாம் இன்று வெற்றியாளர்களாக நிற்கிறோம். மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது மாபெரும் விஞ்ஞானிகளை நான் மதிக்கிறன், வணங்குகிறேன்.
புதுமை என்பது எப்போதுமே ரிஸ்க் நிறைந்தது. ஆனால் ரிஸ்க் எடுத்தால்தான் நாம் வெற்றி பெற முடியும், சாதிக்க முடியும். அதை நாம் செய்துள்ளோம், சாதித்துள்ளோம், வென்றுள்ளோம்.
இஸ்ரோ நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளது. சாதிக்க முடியாததை சாதித்துள்ளது. எப்படி சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

நமது விஞ்ஞானிகள் பல தியாகங்களை இதற்காகச் செய்துள்ளனர். சரியான சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை.
நாம்தான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தோம். அது உலகுக்கு நாம் தந்த மிகப் பெரிய கொடை. இன்று நமக்கு நல்ல தலைமை உள்ளது. அந்தத் தலைமையின் கீழ் நமது எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கிறது.
நமது இந்திய கிரிக்கெட் அணி இதுவரை நிகழ்த்தியுள்ள சாதனைகளை விட ஆயிரம் மடங்கு மிகப் பெரிய சாதனை இது என்று மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications