அமித்ஷா உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி நாளை இரவு விருந்து!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் அமித்ஷா தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை அவருக்கு இரவு விருந்து அளிக்க உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ராஜ்நாத்சிங் இருந்து வந்தார். அவர் பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சரானார். இதனால் பாஜக தேசியத் தலைவர் பதவியில் இருந்து ராஜ்நாத் விலகினார்.

இதனைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டார். அமித்ஷாவின் இந்த பதவிக் காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இருப்பினும் சில மாநிலங்களில் பாஜக உட்கட்சித் தேர்தல் முழுமை அடையாமல் இருந்தது.
இந்நிலையில் வரும் ஞாயிறன்று பாஜகவின் புதிய தலைவருக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்க உள்ளன. இப்பதவிக்கு பலரும் விண்ணப்பித்தால் 25-ந் தேதி தேர்தல் நடைபெறும்.
ஆனால் தற்போதைய நிலையில் அமித்ஷாவே புதிய தலைவராக ஏகனமனதாக தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளது. அப்படி அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியில் நீடிப்பார். தற்போதைய நிலையில் அமித்ஷா தலைவராக இருப்பதால் கட்சிக்கும் மோடி அரசுக்கும் இடையே இணக்கமான நிலை நீடிக்கிறது.
இதுவே தொடர வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். ஆகையால் அமித்ஷாவை பாஜக தலைவராக ஒருமனதாக தேர்வு செய்வதையே பெரும்பாலான பாஜக நிர்வாகிகளும் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் நாளை அமித்ஷா உள்ளிட்ட பாஜக மேலிட நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி தமது இல்லத்தில் இரவு விருந்து அளிக்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications