போபாலில் 3 நாள் பிரமாண்டமாக நடக்கிறது உலக ஹிந்தி மாநாடு.. பிரதமர் தொடங்கி வைக்கிறார்
போபால்: மத்திய பிரதேச தலைநகரம் போபால் நகரில் உலக ஹிந்தி மாநாடு வரும் 10ம் தேதி தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
ஹிந்தி மொழியின் புகழை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் கடந்த 1975ம் ஆண்டு முதல் உலக இந்தி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 9வது மாநாடு கடந்த 2012ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்தது.

அந்த மாநாட்டின் போது, அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10வது உலக ஹிந்தி மாநாடு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 10ம் தேதி வரும் வியாழக்கிழமை தொடங்கி 3 நாள் நடக்கிறது.
‘ஹிந்தி உலகம்: விரிவாக்கமும், நோக்கமும்' என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 24 அமர்வுகள் நடைபெறுகின்றன. இந்த மாநாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகமும், மத்திய பிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன. 27 நாடுகளில் இருந்து விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு மொழி அறிஞர்களும் உரையாற்றுகின்றனர்.
மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மாநாட்டின் இறுதி நாளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் ஹிந்தி மொழி தொடர்பான தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக ஹிந்தி மொழி தொடர்பான கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் ‘கூகுள்', ‘ஆப்பிள்' உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கின்றன.












Click it and Unblock the Notifications