உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார் மோடி- பிரதமர் மன்மோகன் சிங்
ஜபல்பூர்: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார்... பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காங்கிரஸூக்கு களங்கம் உண்டாக்க வேண்டும் என்ற ஆர்வக் கோளாறினால், பாஜகவின் நரேந்திர மோடி அடிக்கடி தவறான தகவல்களை அளிப்பதிலும், வரலாற்று உண்மைகளைத் திரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸைத் தாக்கும் ஆர்வத்தில், பாஜக போற்றும் தலைவர் ஒருவரைப் பற்றியே அவர் ஒருமுறை திரித்துப் பேசியிருக்கிறார்.
இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் அரசியல் தலைவர்களுக்கு ஆர்வம் இருப்பதில் தவறில்லை.
ஆட்சிக்கு வந்தால் செய்யவிருக்கும் நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அந்த ஆர்வம் இருக்க வேண்டும்.
ஆனால், பாஜக-வைப் பொருத்தவரை அவர்களது ஆர்வமெல்லாம் மற்றவர்களைக் குறைகூறுவதில் மட்டும்தான் இருக்கிறது. அது ஆர்வக் கோளாறாக முடிகிறது.
கடந்த சில மாதங்களாக, அரசியல் வெகு வேகமாக தரம் தாழ்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்தப் போக்கைத் தொடங்கி வைத்தது பாஜக-தான்.
மத்தியப் பிரதேசத்தைப் பொருத்தவரை, மற்ற மாநிலங்களை விட குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. கல்வியறிவில் அது 21-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆண் பெண் பிறப்பு விகிதாசாரம் 932-இலிருந்து 912-ஆகக் குறைந்துவிட்டது. சாலைகள் படு மோசமாக உள்ளன.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மாநிலத்தை ஆளும் பாஜக அரசு வளர்ச்சியைப் பற்றிப் பேசுவது ஆச்சரியமாக உள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications