மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருகிறது... ஓரிரு வாரங்களில் மாற்றம் வரும் எனத் தகவல்!
டெல்லி: பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால், அவர் வந்ததும் இந்த மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி மோடி அரசு பதவியேற்றது. அதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதிதான் அமைச்சரவை மாற்றம் நடந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் ஒரு மாற்றத்தைச் செய்ய மோடி திட்டமிட்டுள்ளார்.
தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அதை முடித்துக் கொண்டு அவர் திரும்பியதும் அமைச்சரை மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. அனேகமாக ஜூன் 18 அல்லது 29 ஆகிய தேதிகளில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அந்த மாநிலத்திற்கு கூடுதல் அமைச்சர்களைக் கொடுக்க மோடி தி்ட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை நீக்க விட்டு சிலருக்கு கேபினட் அந்தஸ்து தரவும் மோடி திட்டமிள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோல அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. எனவே அந்த மாநிலத்திற்கும் அமைச்சரவையில் இடம் தர மோடி உத்தேசித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.