ஐ.எஸ்.ஐ. தொடர்புடையோர் பெயரை வெளியிடாவிட்டால் ராகுல் மன்னிப்பு கேட்கனும்: மோடி
ஜான்சி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-டன் தொடர்பு உள்ளவர்கள் பெயர்களை வெளியிடாவிட்டால் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேசம் இந்தூரில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் முஸ்லிம் இளைஞர்கள், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.உடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதை சுட்டிக்காட்டிப் பேசினார். ஜான்சி கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:

கண்ணீர் விட்டு அழ வரவில்லை...
இங்கே கண்ணீர்விட்டு சிந்துவதற்கு நான் வரவில்லை. பல கண்ணீர் கதைகளை சொல்லவும் நான் வரவில்லை. ஒடுக்கப்பட்டிருக்கும் இந்த பந்தல்காண்ட் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவே நான் வந்திருக்கிறேன்.
இந்த பந்தல்காண்ட் பகுதி ஏன் முன்னேறவில்லை? ஏன் இந்த பகுதி வளர்ச்சியடையவில்லை? நான் விமானத்தில் இங்கே வரும்போது ஏராளமான ஆறுகள் இப்பகுதியில் ஓடுவதை பார்த்தேன்.. பிறகு ஏன் இந்த பந்தல்காண்ட் பூமி வளர்ச்சி அடையவில்லை?
காங். ஆளும் மாநிலங்களில் தற்கொலை
இந்த வளமான பூமியில் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றனர்? ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசுதான் நடைபெறுகிறது.. அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆள்கிறது.. இங்குதானே விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.. ஏன்?
ஆனால் தேர்தல் நேரத்தில் சிறப்பு நிதியைப் பற்றி பேசுவார்கள்.. உங்களுக்கும் கூட அப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருப்பார்களே? நீங்களும் நமக்கு நல்லது நடக்கும் என்று நினைத்திருப்பீர்கள்.. ஆனால் அந்த சிறப்பு நிதி உங்களுக்கு கிடைத்திருக்காது.... அரசியல்வாதிகள் வாங்கிக் கொண்டு போய்விடுகின்றனர்.. அவர்களின் சட்டை பைகளில் உங்களுக்கான சிறப்பு நிதி இருக்கிறது.
ம.பி. பந்தல்காண்ட் பகுதி வளர்ச்சி
பந்தல்காண்ட் பிராந்தியத்தின் மத்திய பிரதேச பகுதி நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நான் சொல்லவில்லை...மத்திய திட்டக் குழுவே கூறியிருக்கிறது.. அந்த பகுதிக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாகவே மத்திய பிரதேச பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. அதனால் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்.
சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய செயல்பாடுகளைப் பார்த்தால் அதன் வழிகாட்டியான ராம் மனோகர் லோகியா மிகவும் வருத்தப்படுவார். உத்தரப்பிரதேசத்தையும் பந்தல்காண்ட் பகுதியையும் ஒட்டுமொத்தமாக சமாஜ்வாடி கட்சி சுரண்டிவிட்டது. அந்த கட்சிகளின் தலைவர்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டாதவர்கள்.. அவர்கள் இளைஞர் நலனைப் பற்றி சிந்திக்காதவர்கள்..
ஒருபக்கம் காங்கிரஸின் அராஜகம்..இன்னொரு பக்கம் சமாஜ்வாடி கட்சியின் வாரிசு அரசியல்.. பகுஜன் சமாஜ் கட்சியின் தன்னை முன்னிலைப்படுத்தும் அரசியல்.. இவர்கள் எப்படி உங்களின் நலனுக்குப் பாடுபடுவர்? அவர்கள் தங்களது வயிற்றை நிரப்பத்தானே பார்ப்பார்கள்?
பந்தல்காண்ட் பகுதி கிராமத்து இளைஞர்கள் மும்பையின் குடிசைப் பகுதியில் குடியேற வேண்டும் என்றா விரும்புகிறார்கள்? லோக்சபா தேர்தல் வருகிறது.. அவர்கள் உங்கள் வீட்டு கதவை தட்டுவார்கள்? அவர்கள் உங்களுக்கு செய்த துரோகங்களுக்கு பதில் தர வேண்டியது அவசியம் இல்லையா?
பல்லாயிரம் சீக்கியர்கள் படுகொலை
காங்கிரஸ் கட்சியில் இளவரசர் ராகுல் காந்தி, அவரது பாட்டியின் படுகொலையால் ஏற்பட்ட கோபத்தைப் பற்றி பேசுகிறார். அந்த கோபத்தால் என்ன மாதிரியான விளைவு ஏற்பட்டது என்பதுதான் என் கேள்வி!
அந்த கோபத்தினால் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்படவில்லையா? இந்த ஆயிரக்கணக்கானோர் படுகொலையில் ஒரு காங்கிரஸ் தலைவர் கூட தண்டிக்கப்படவில்லையே?
இப்போது தேர்தல் வருகிறது.. நீங்களோ மீண்டும் அந்த ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் குடும்பத்தினர் ஆறாத புண்கள் மீது உங்கள் உப்பு கண்ணீரை விட்டு துன்பத்தில் ஆழ்த்துகிறீர்கள்.. இவர்கள் மனித மாண்புகளைப் பற்றி பேசுகிறார்கள்..
ராகுல் ஒரு ஜஸ்ட் எம்.பிதானே
யார் இந்த இளவரசர்? சாதாரண ஒரு எம்.பி.தானே? அவரிடன் ஏன் இந்திய புலனாய்வு அமைப்புகள் ரகசியங்களை பகிர்ந்து கொள்கின்றன? நாட்டு ரகசியங்களை பகிர்ந்து கொள்ளமாட்டேன் என்று பதவியேற்பு செய்துவிட்டு இப்போது பொதுக்கூட்டங்களில் அந்த ரகசியங்களைப் பற்ரி பேசுகிறார்..
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் உத்தரப்பிரதேச முசாபர்நகர் முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பு வைத்துள்ளதாக சொல்கிறார் ராகுல் காந்தி. மத்திய அரசு உங்களிடம் இருக்கிறது.. உத்தரப்பிரதேசத்தில் உங்கள் கூட்டணி கட்சி ஆட்சி செய்கிறது.. ஐ.எஸ்.ஐ. முசாபர்நகரில் என்ன செய்து கொண்டிருக்க்கிறது என்பதை சொல்லுங்கள்?
மன்னிப்பு கேளுங்கள்
முசாபர்நகர் முஸ்லிம் இளைஞர்கள் நிவாரண முகாம்களில் இருக்கின்றனர்.. அப்படியான நிலையில் அவர்கள் மீது இப்படி ஒரு பயங்கரவாத புகாரை சுமத்தியிருக்கிறார் ராகுல் காந்தி.. இப்படி சொன்ன ராகுல்காந்தி, ஐ.எஸ்.ஐ.உடன் தொடர்பு வைத்திருக்கும் முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை ராகுல்காந்தி வெளியிடுவாரா?
அப்படி முஸ்லிம் இளைஞர்கள் பெயரை வெளியிடாவிட்டால் பொதுமக்கள் மத்தியில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். ஐ.எஸ். ஐ. அமைப்புடன் தொடர்புடைய இளைஞர்கள் பெயரை வெளியிட வேண்டியது உங்கள் பொறுப்பு.
காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் ஒரு செய்தி ஏஜென்சி போல செயல்படுகிறது.. செய்திகளை மட்டும் கொடுத்துவிட்டு அமைதி காக்கிறது. இந்த கட்சியால், இந்த அரசால் நீங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை!
எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்..
அவர்களுக்கு உங்களின் வறுமை ஒரு கருவியாகப் போய்விட்டது.. உங்களின் வறுமை வேடிக்கையாகிவிட்டது. ஒரு சாதாரண ரயிலடியில் டீ விற்பனை செய்து வந்த ஏழையான என்னை பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக்கியது....அத்தகைய பண்பு பாஜகவுக்கு இருக்கிறது
நான் பிரதமராக விரும்பவில்லை.. உங்களுக்கான பாதுகாவலான இருக்கவே விரும்புகிறேன்.. எங்களை தேர்ந்தெடுங்கள்.. ஒட்டுமொத்த இந்தியாவின் முகத்தையே நாங்கள் மாற்றிவிடுவோம் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications