ஒரு வார அயர்லாந்து, அமெரிக்கப் பயணம் முடிந்து தாயகம் திரும்பினார் மோடி
டெல்லி: அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் ஒரு வார கால புயல் வேகப் பயணத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு வாக்கில் தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செப்டம்பர் 23ம் தேதி 7 நாள் பயணமாக கிளம்பினார் மோடி. முதலில் அயர்லாந்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். சிலிக்கான் வேலிக்கு விசிட் அடித்த அவர் அங்கு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். முதலீடு தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின்னர் பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களுக்குச் சென்றார். பேஸ்புக் நிறுவனர் மார்க்குடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
பின்னர் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களிடையே உருக்கமாக பேசினார். இதையடுத்து நியூயார்க் சென்ற அவர் அங்கு அதிபர் ஒபாமா மற்றும் பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்தார். ஐ.நா சபையில் பின்னர் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து அவரது பயணம் முடிவுக்கு வந்தது. நேற்று நள்ளிரவு வாக்கில் அவர் டெல்லி வந்து இறங்கினார். விமான நிலையத்தில் மூத்த பாஜக தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications