மோடியின் கல்வி சான்றிதழ்கள் போலியேதான்- அடுக்கடுக்காய் ஆதாரங்களை அடுக்கும் அரவிந்த் கேஜ்ரிவால்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி சான்றிதழ்கள் போலியானவையே என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் சில நாட்களுக்கு முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியொர் மோடியின் கல்வி சான்றிதழ்களை வெளியிட்டனர்.
ஆனாலும் இந்த கல்வி சான்றிதழ்கள் போலியானவை என பல்வேறு அம்சங்களை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சி விமர்சித்து வருகிறது. இது தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளதாவது:
நாடு ஒவ்வொரு நாளும் ஊழல், வறட்சி போன்ற பிரச்சனைகளை சந்திக்கும்போது பிரதமரின் கல்வி தகுதி குறித்த பிரச்சனை ஒரு சிறிய விவகாரம் என்பதாகவே நான் உணர்ந்தேன்.
பிரதமரின் கல்வி தகுதி விஷயத்தில் பாஜக காட்டிய அக்கறையும் அதற்காக அவர்கள் வெகு சிரத்தை எடுத்துக்கொண்டு காண்பித்த சான்றிதழ்களும் அவை ஆம் ஆத்மி தலைவர்களால் ஆதரங்களுடன் போலி என்று நிரூபிக்கப்படுவதையும் கண்டு நான் திகைத்துவிட்டேன்.
செய்தித் தாள்கள் மூலமாகவும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் பிரதமரின் சான்றிதழ்கள் போலியானவை என்று அறிந்த எனக்கு டெல்லிப் பல்கலைக்கழகம் குறித்து ஒரு கேள்வி எழுந்தது.
அது 1975 ம் ஆண்டிலேயே அந்தப் பல்கலைக்கழகம் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழ்களை வழங்கியிருக்குமா என்பதே அந்தக் கேள்வி?
நான் சென்னை பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டப் படிப்பில் 1969-ல் சேர்ந்தேன். 1972 ம் ஆண்டு நான் எனது பட்டப்படிப்பை முடித்து வெளியே வந்து விட்டேன். ஆனால் நான் 3-வது வருடத்தில் தோல்வியடைந்து இருந்ததால் எனக்கான பட்டப்படிப்பு சான்றிதழ் 1972-ம் ஆண்டுதான் வழங்கப்பட்டது.
மோடிக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட ஆண்டுகளில் டெல்லிப் பல்கலைக்கழகம் கையால் எழுதப்பட்ட சான்றிதழ்களையே வழங்கி வந்தது. ஆனால் மோடி சான்றிதழாக பாஜக வெளியிட்டுள்ள சான்றிதழ் கம்ப்யூட்டர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அவரது சான்றிதழில் உள்ளது 1978-ம் ஆண்டு. ஆனால் மதிப்பெண் பட்டியலில் உள்ள ஆண்டு 1977. மதிப்பெண் பட்டியலில் உள்ள ஆண்டு 1977 ஆக இருக்கும்போது சான்றிதழில் 1978-ம் ஆண்டு ஆக உள்ளது என்றால் அவர் தோல்வியடைந்து மீண்டும் தேர்வு எழுதியிருக்கவேண்டும். ஏனெனில் நானும் அவ்வாறே தோல்வியடைந்து மீண்டும் தேர்வு எழுதியவன். நான் பட்டம் பெற்ற 1970 களில் இத்தகைய அமைப்புகள் தான் இருந்தன.
ஒரு போலி சான்றிதழை உருவாக்குவதிலும் அதற்கு நேரத்தை செலவிடுவதும் வேதனையானது. ஆனால் ஒரு அரசியல் கட்சி கண்ணை மூடிக்கொண்டு மக்களை ஏமாற்ற எண்ணுவதை ஏற்றுகொள்ள இயலவில்லை.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் வேதனை தெரிவித்துள்ளார்