மோடி நல்லா இருக்க கோயில் கட்டி கும்பிட்ட பாதுகாப்பு வீரர்கள்
அகமதாபாத்: தனக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காருக்குள் கோயில் கட்டி கும்பிட்ட பாதுகாவலர்கள் மற்றும் டிரைவருக்கு மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
குஜராத் முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்த மோடி இன்று மாலை டெல்லி கிளம்பினார். முன்னதாக அவர் தனது தாயாரை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். இதன்பிறகு ஏர்போர்ட் நோக்கி போகும் வழியில் தனது டுவிட்டர் தளத்தில் அவர் பதிவு செய்துள்ள ஒரு செய்தி இதுதான்:
நான் எனது தாயாரிடம் ஆசி பெற்றுவிட்டு டெல்லியை நோக்கி சென்று கொண்டுள்ளேன். அப்போதுதான் என்னுடைய உதவியாளர் ஒரு தகவலை சொன்னார். அது எனது மனதை தொடுவதாக இருந்தது. நான் முதல்வராக இருந்தபோது எனது காருக்கு டிரைவராக பணியாற்றியவரும், பாதுகாப்பு வீரர்களும் சேர்ந்து நான் பயணிக்கும் அரசு காரில், ராமபிரானுக்கு குட்டியாக கோயில் கட்டியுள்ளனர். அதில் கடந்த 12 வருடங்களாக தினமும் நாள்தவறாமல் பூஜை செய்துள்ளனர்.
எனக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வீரர்கள் என்னை பாதுகாப்பதில் அளப்பறிய பணியாற்றினர். ஆனால் எனது நலனுக்காக அவர்கள் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தனர் என்பதை நினைக்கும்போது, எனது நன்றியை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. நான் அவர்கள் முன்பு தலைவணங்குகிறேன், அவர்களுக்கு எனது இதயத்தின் அடிப்பாகத்தில் இருந்து வணக்கம் செலுத்துகிறேன். இவ்வாறு தனது டுவிட்டர் தளத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.