ஆக்ஷன் ஹீரோ மோடிக்கு ‘நமோ’ என்ற பெயரை வைத்ததே நான் தான்... சத்ருகன் சின்கா பெருமிதம்
பாட்னா: ‘நமோ‘ என்ற பெயரை நான்தான் உருவாக்கினேன் என்றும் இந்தத் தேர்தலில் நரேந்திர மோடிதான் ஆக்ஷன் ஹீரோ என்றும் தெரிவித்துள்ளார் இந்தி நடிகரும், பாட்னா தொகுதி பாஜக வேட்பாளருமான சத்ருகன் சின்கா.
நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான சத்ருகன் சின்கா, பீகாரின் பாட்னா தொகுதியில் பா.ஜ. சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர்.
அப்போது அவர் கூறியதாவது :-
சோதித்துப் பாருங்கள்...
நான் தொகுதிக்கு அதிகம் வருவதில்லை. என் மனைவிதான் இங்கு வருகிறார்‘ என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். விமான நிலைய கோப்புகளைச் சோதித்துப் பாருங்கள். நான் எத்தனை முறை வந்து போயிருக்கிறேன் என்பது தெரியும்.
என் நட்சத்திர அந்தஸ்து...
என் தொகுதியில் எந்த வேலையும் நடக்காமல் இல்லை. எனது நட்சத்திர அந்தஸ்தை வாக்காளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
பொது விவாதத்துக்கான நேரம் இதுவல்ல...
‘ஆம் ஆத்மி வேட்பாளர் பர்வீன் அமானுல்லா, பொது விவாதத்துக்கு அழைத்திருக்கிறாரே‘ என்று கேட்கிறார்கள். அவர் என்னை டின்னருக்கு அழைக்கலாம். அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன். பொதுவிவாதத்துக்கான நேரம் இப்போது இல்லை. அப்படியே ஒரு விவாதம் நடந்தாலும் அதன் மூலம் அவருக்கு ஏன் நான் பிராசரம் செய்ய வேண்டும்?
நானே நடிகன் தானே...
‘பிரசாரத்துக்கு என் மகளும் நடிகையுமான சோனாக்ஷி சின்கா வருவாரா?' என்று கேட்கிறார்கள். வந்தால் நல்லதுதான். ஆனால், நானே நடிகன் என்பதால் அவர் வரத் தேவையில்லை.
நான் தான் பேர் வைத்தேன்....
நரேந்திர மோடிக்கு ‘நமோ‘ என்ற பெயரை உருவாக்கியவன் நான். அவர்தான் இந்த தேர்தலில் ஆக்ஷன் ஹீரோ.
வெற்றி நிச்சயம்...
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. அதனால் இத்தேர்தலில் பாஜக சுலபமாக அதிக இடங்களில் வெற்றி பெறும்.
மாற்றத்திற்கான நேரம்...
இளம் வாக்களர்கள் மாற்றத்தையும் வலிமையான தலைமையையும் விரும்புகிறார்கள். அது நிச்சயம் நடக்கும்' என இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார் சத்ருகன் சின்கா.