'தேசபக்தியை வளர்க்க.. காஷ்மீரில் ஒவ்வொரு மூலையிலும் ஆஎஸ்எஸ் ஷாகாக்கள்..' மோகன் பகவத் பரபரப்பு பேச்சு
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஒவ்வொரு மூலையிலும் ஆர்எஸ்எஸ் ஷாக்காக்களை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், காஷ்மீர் மக்களிடையே தேசபக்தியை வளர்த்து அமைதியான சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆஎஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் பயணமாகக் காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு மோகன் பகவத் காஷ்மீர் சென்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.
தொகுதி மேம்பாட்டு நிதி 3-வது ஆண்டாக கட்...மக்களுக்கு எதுவுமே செய்ய முடியலையே... குமுறும் எம்.பிக்கள்
இந்த 4 நாட்கள் பயணத்தில் காஷ்மீரிலுள்ள அறிஞர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை மோகன் பகவத் சந்திக்க உள்ளார். வெள்ளிக்கிழமை ஆர்எஸ்எஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், காஷ்மீரில் ஷாகாகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
இந்தியா
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "இந்தியாவின் ஜனநாயகம் பல ஆண்டுகள் பழமையானது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சுற்றுச்சுழலுடன் இணைந்து வாழ்த்து குறித்து இந்தியாவுக்கு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் தான் இதற்கான விதிமுறைகளை உருவாக்கியுள்ளன. தற்போதுள்ள சூழலில் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கு உலக நாடுகள் இந்தியாவையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இந்தியாவின் பன்முகத்தன்மை
நமது தேசத்தை வலுப்படுத்தச் சமுதாயத்தில் உள்ள மக்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து இந்தியாவை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்தியாவில் நாம் அனைவரும் ஒன்று தான். மதத்தாலும் நம்பிக்கைகளின்படியும் நாம் வேறு வேறு தான். நாம் பின்பற்றும் சடங்குகளும் தெய்வங்களும் வேறானவை தான். ஆனால், இது போன்ற வேற்றுமைகள் நமது பன்முகத்தன்மையை ஒருபோதும் சீர்குலைத்துவிடாது" என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பிரிவு 370 நீக்கம்
சட்டப்பிரிவு 370 நீக்கம் பற்றி அவர் கூறுகையில், "சட்ட ரீதியாக சில விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளது, ஆனால் அதற்காக முழுவதும் போய்விட்டது என அர்த்தம் இல்லை. காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஒரு பகுதி தான். அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். இதில் நமது மனநிலை தான் முதலில் மாற வேண்டும் "என்றார்.
தேசபக்தி
தொடர்ந்து காஷ்மீர் குறித்துப் பேசிய அவர், "காஷ்மீர் மாநிலத்தில் ஒவ்வொரு முனையிலும் ஆர்எஸ்எஸ் ஷாக்காக்களை நாம் உருவாக்க வேண்டும். தீவிரமான செயல்பாடுகள் மூலம் இங்குள்ள அனைத்து தரப்பு மக்களிடையே தேசபக்தியை வளர்க்க வேண்டும். இங்கு அமைதியான ஒரு சமூகத்தை நாம் கட்டமைத்து அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் . ஆர்எஸ்எஸ் பணியைக் காஷ்மீரில் விரிவுபடுத்த வேண்டும்" என்றும் அவர் கூறினார்.