வேலுமணி - சிவி சண்முகம் 'மூவ்'... விழிபிதுங்கிய ஈ.பி.எஸ்.. கோட்டையில் மீன் போல துடிக்கும் எடப்பாடி!
சென்னை: தமிழக அரசியல் களம் இன்று ஒரு ரத்தமற்ற யுத்தத்தைக் கண்டிருக்கிறது. இத்தனை காலமும் "நானே ராஜா... நானே மந்திரி" என்று சேலத்திலிருந்து கட்டளையிட்ட எடப்பாடி பழனிசாமியின் அதிகாரக் கோட்டை, இன்று தலைமைச் செயலகத்தின் தாழ்வாரங்களிலேயே சரிந்து விழுந்திருக்கிறது. மழையே இல்லாத மே மாதத்தில், அதிமுக என்கிற மாபெரும் ஆலமரம் வேரோடு சாய்ந்திருப்பதுதான் இன்றைய ஹாட் டாபிக்.
வேலுமணியின் 'வேகம்'... சண்முகத்தின் 'விவேகம்'!
"கொங்கு மண்டலம் என் கோட்டை" என்று மார்தட்டிய எடப்பாடிக்கு, அதே மண்டலத்தின் தளபதியான எஸ்.பி. வேலுமணி கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம் சாதாரணமானது அல்ல. கடந்த சில நாட்களாகவே வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் இடையே 'பனிப்போர்' நிலவி வந்த நிலையில், இன்று அது 'நேரடிப் போராக' மாறியிருக்கிறது. வேலுமணியுடன் கரம் கோர்த்திருக்கிறார் வட மாவட்டங்களின் வலிமையான குரலான சி.வி.சண்முகம்.

சி.வி.சண்முகத்தைப் பொறுத்தவரை, எப்போதும் எதார்த்தமான அரசியல் பேசுபவர். "இப்படியே போனால் கட்சி அழிந்துவிடும், மாற்றத்தை நோக்கி நகர்வோம்" என்று அவர் எடுத்த முடிவுதான், இன்று எடப்பாடியின் ஆளுமையை எக்கச்சக்க கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து 30 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுத்திருப்பது, எடப்பாடி பழனிசாமி சற்றும் எதிர்பார்க்காத 'கிளைமாக்ஸ்' திருப்பம்.
விழிபிதுங்கிய எடப்பாடி!
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியபோது, எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் ஒருவித பதற்றம் நிலவியதை அருகிலிருந்தவர்களால் உணர முடிந்தது. தன் உத்தரவை மீறி யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அவர் போட்ட கணக்கு தவிடுபொடியானது. சி.வி.சண்முகமும், வேலுமணியும் புன்னகைத்தபடியே ஆளும் தவெக கட்சிக்கு ஆதரவான நிலப்பாட்டை எடுத்தபோது, எடப்பாடி தனித்துவிடப்பட்டார்.
"கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்போம்" என்று சத்தியம் செய்த எம்.எல்.ஏ-க்கள் பலரும், இன்று சி.வி.சண்முகத்தின் பின்னால் அணிவகுத்த காட்சி, ஒரு சகாப்தத்தின் முடிவை அறிவிப்பதாக அமைந்தது. இது வெறும் ஒரு நாள் ஆதரவு அல்ல; எடப்பாடி பழனிசாமியின் பிடியிலிருந்து அதிமுக-வின் கடிவாளத்தை பறிக்கும் முயற்சி என்றே அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. இதற்கெல்லாம் மேலாக விஜய் நேரடியாக எடப்பாடியை பார்க்காமல் சிவி சண்முகம் அணியை பார்த்தது.. எடப்பாடியின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி போல் அமைந்தது.
தலைகீழான தந்திரங்கள்!
எடப்பாடி பழனிசாமி ஒரு காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டியபோது எத்தகைய தந்திரங்களைக் கையாண்டாரோ, அதே தந்திரங்கள் இன்று அவர் மீது பாயத் தொடங்கியிருக்கின்றன. கொறடா உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி தரப்பு துடித்தாலும், சட்டப்பேரவை விதிகளின் சிக்கல்களும், சபாநாயகரின் முடிவுகளும் அவருக்குச் சாதகமாக இல்லை.
மறுபுறம், புதிய முதல்வர் விஜய்யின் 'வெற்றி'க்கு இந்த அதிமுக பிளவு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. மெஜாரிட்டிக்குத் திணறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடியின் மிக நெருங்கிய தளபதிகளே இன்று அவருக்குக் கைகொடுக்க இருப்பது மிகப்பெரிய அரசியல் வியூகம்.
இனி என்ன நடக்கும்?
சேலத்துச் சிங்கத்தின் கர்ஜனை இன்று அடங்கிவிட்டது. இனி அதிமுக என்கிற இயக்கம் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழா? அல்லது சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி முன்னிறுத்தும் புதிய பாதையிலா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இன்று சட்டமன்றத்தில் நிகழ்ந்த இந்த 'அரசியல் பூகம்பம்', வரும் நாட்களில் அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எடப்பாடி பழனிசாமி என்கிற ஒற்றைத் தலைமை பிம்பம், இன்று சட்டப்பேரவையில் சுக்குநூறாக உடைந்துவிட்டது. தமிழக அரசியலில் இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்!












Click it and Unblock the Notifications