கேரளாவில் மே 30 முதல் பருவமழை கொட்டும்- வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் வருகின்ற 30 ஆம் தேதி முதல் தென் மேற்குப் பருவ மழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும்.

இந்த தென்மேற்கு பருவ மழையே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் தொடங்கி நாடு முழுவதும் பெய்யும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 30 ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடமேற்கு இந்தியாவில் நிலவும் குறைந்தபட்ச வெப்ப நிலை மற்றும் தென் தீபகற்பத்தில் தென்மேற்கு பருவமழைக்கு முன்பு பெய்யும் மழை ஆகியவை தென்மேற்கு பருவமழையின் தொடக்கத்தை நிர்ணயிக்கின்றன. தற்போது வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை 30 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று திருவனந்தபுரம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, ஆரியங்காவு, கொல்லம், கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம் போன்ற இடங்களில் கனமழை பெய்தது. கேரளாவில் மேலும் 3 நாளைக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications