காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவத்தினரில் பெரும்பாலானோர் தீயில் கருகி இறந்த பரிதாபம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று காலை நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினரில் பலர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்தின் மீது இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 17 ராணுவத்தினர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இந்த தாக்குதலில் காயமடைந்தனர்.

இன்று அதிகாலையில் தாக்குதல் நடந்தபோது பெரும்பாலான ராணுவத்தினருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இருளைப் பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அதை விட முக்கியமாக, ராணுவத்தினர் தங்கியிருந்த டென்டுகள் மீது அவர்கள் கையெறி குண்டை வீசி தீப்பிடிக்கச் செய்தனர். இதனால்தான் நமக்கு சேதம் அதிகமாகி விட்டது.
உயிரிழந்த 17 ராணுவத்தினரில் 14 பேர் தீயில் கருகிதான் உயிரழந்துள்ளனர். ஒரு தரப்பு வீரர்கள் பணி முடிந்து கிளம்பும் சமயத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகள் உள்ளே புகுந்ததுமே கையெறி குண்டுகளை வீசித்தான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தான் நமக்கு பெரும் சேதம் ஏற்பட்டு விட்டது.
மொத்தம் 6 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டை 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. கடந்த பல வருடங்களில் தீவிரவாதிகளால் ராணுவம் அடைந்த மிகப் பெரிய உயிர்ச் சேதம் இதுதான் என்பதால் ராணுவத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர்.
ஜெய்ஸ் இ முகம்மது
இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் வலுத்துள்ளது. முதலில் லஷ்கர் இ தொய்பா மீது சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால் தற்போது சந்தேகப் பார்வை ஜெய்ஸ் இ முகம்மது மீது திரும்பியுள்ளது.












Click it and Unblock the Notifications