பெண்ணாகப் பிறந்ததால்.. குழி தோண்டிப் புதைக்கப்பட்ட சிசு!
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில், பெண் குழந்தை பிறந்ததால் அதை உயிருடன் குழி தோண்டிப் புதைத்து விட்டார் ஒரு பெண். குழந்தையின் அழு குரல் கேட்டு சிலர் அதை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தற்போது அக்குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
அமிர்தசரஸைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் என்பவர் சம்பவத்தன்று வயல் பக்கமாக நடந்து போய்க் கொண்டிருந்தபோது குழந்தையின் அழு குரல் கேட்டுள்ளது. இதையடுத்து அவரும் கிராமத்தினரும் சேர்ந்து தேடிப் பார்த்போது ஒரு இடத்தில் குழிக்குள்ளிருந்து குரல் வந்தது தெரிய வந்தது. தோண்டிப் பார்த்தபோது பிறந்த பெண் குழந்தை மிகவம் கவலைக்கிடமான நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டது. தற்போது குழந்தை நிலை மேம்பட்டு வருவதாக டாக்டர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தை பிறந்ததால் அதைக் கொல்லும் எண்ணத்தில் அதன் தாயார் உயிருடன் புதைத்து விட்டுச் சென்றதாக தெரிகிறது. போலீஸார் அந்தப் பெண்ணைத் தற்போது தேடி வருகின்றனர்.