7 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த மகனை போலீசில் பிடித்துக் கொடுத்த தாய்!
பாட்னா: சிறுமியைப் பலாத்காரம் செய்த மகனைத் தாயே போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் டையமண்ட் ஹார்பர் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் பயின்று வரும் 7 வயது சிறுமி ஒருவர் சம்பவத்தன்று சிறுநீர் கழிப்பதற்காக வெளியில் வந்துள்ளார். அதனைக் கவனித்த நாஜீர் சேக் என்ற பேருந்து நடத்துனர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து அந்தச் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், மது போதையில் வீட்டுக்குத் திரும்பிய நாஜீர், இந்தச் சம்பவம் பற்றி தனது தாயார் அய்நூர் பீவியிடம் உளறியுள்ளார். மகனின் செயல் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், மனசாட்சிப்படி நடந்து கொள்ள முடிவு செய்தார்.
உடனடியாக இது தொடர்பாக டையமண்ட் ஹார்பர் பகுதி போலீசில் புகார் அளித்த அய்நூர், பாதிக்கப்பட்ட சிறுமியையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அய்நூர் அளித்த புகாரின் அடிப்படையில் நாஜீர் மற்றும் அவரது 3 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் போலீஸ் மூலமாகவே அச்சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்ததாக போலீஸ் அதிகாரி ருபந்தர் சென் குப்தா தெரிவித்துள்ளார்.