அன்பின் ஊற்றுக்கண்ணாக திகழ்ந்த அன்னை தெரஸா!
கொல்கத்தா: தன் வாழ்நாள் முழுவதையும் தொண்டு செய்தே கழித்த அன்னை தெரஸாவின் 22-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவரை பற்றிய குறிப்புகளை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு;
அன்பு என்ற ஒற்றை வார்த்தை மூலம் உலகை வசப்படுத்திய அன்னை தெரசா வடக்கு மாசிடோனியாவில் பிறந்தவர். ஏழை,எளியோருக்கும், நாதியற்று கிடந்தவர்களுக்கும் சேவை செய்யும் நோக்கில் இந்தியாவுக்கு வந்த அவர், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ஆசிரியராக தனது பணியை தொடங்கினார். பின்னர் முழு நேர தொண்டாளராக மாறிய தெரஸா, வீட்டில் புறக்கணிக்கப்பட்ட நபர்களுக்கும், தீர்க்க முடியாத நோய்களால் அவதிப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும், அருமருந்தாகவும் விளங்கினார்.
கண்ணில் காண்பவர்களிடத்தில் எல்லாம் அவர் பேசியது கருணை மொழியில் தான். ஆம், கருணையுள்ளத்தோடும், சாந்தசொரூபியுமாக திகழ்ந்த அன்னை தெரஸா தன் வாழ்நாளில் எதிர்கொள்ளாத விமர்சனங்களே இல்லை. கிறித்துவ மதத்தை பரப்ப வந்தவர், பிழைப்புக்காக ஊரை ஏமாற்றி நிதி வசூலிக்கிறார் என அபாண்ட குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் அன்னையை நோக்கி வைக்கப்பட்டன.

தயாள குணம்
கடுஞ்சொற்களால் அவமானம் செய்தவர்களை கூட அடுத்த நொடியே மன்னித்துவிட்டேன் எனக்கூறும் தயாளராக திகழ்ந்தார். கொல்கத்தா வீதிகளிலும், சாலைகளிலும், உணவின்றி..அழைத்துச்செல்ல ஆதரவின்றி தவித்தவர்களுக்கு மீட்பராய் இருந்தவர்.

சாரிட்டீஸ்
இவர் தொடங்கிய மிஷன் ஆஃப் சாரிட்டீஸ் நிறுவனம், அன்னை தெரஸா வகுத்து தந்த பாதையில் இன்றும் கொல்கத்தாவில் இயங்கிவருகிறது. அன்னை தெரஸா கூறிய பொன்மொழிகளில் மிகவும் பிரபலமானது, ''உதவும் கரங்கள், பிரார்த்திக்கும் உதடுகளை விடச் சிறந்தது'' என்பதாகும்.

அன்பும் அரவணைப்பும்
நம்மில் பலர் அருகாமையில் இருப்பவர்களுக்கு சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட ஒரு அடி தள்ளி அமரும் நிலையில், தொழு நோயாளிகளை தன் கைகளால் அரவணைத்து, ஆறுதல் அளித்து தன்னுடன் அழைத்துச்சென்று கவனித்துக்கொண்டவர் அன்னை தெரஸா.

அவமானம்
ஒரு முறை தொழுநோயாளிகளுக்கு உதவுமாறு கொல்கத்தா கடைவீதியில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம் உதவிகோரிய போது, அவர் உமிழ்நீரை காரி துப்பினார். அதனை சகித்துக்கொண்ட அன்னை தெரஸா, இது எனக்கு நீங்கள் அளித்தது, என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ள நோயாளிகளுக்கு உதவுங்கள் என மீண்டும் அன்பாக கேட்டுள்ளார்.

மன்னித்தார்
அன்னை தெரஸாவின் முகம் கோணாத தன்மையை பார்த்து அந்தக் கடைக்காரர் நிதியுதவி செய்ததுடன் தன் தவறுக்கு வருத்தமும் கோரியது வரலாறு.
அன்னை தெரஸாவுக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு, பாரத ரத்னா உள்ளிட்ட பட்டங்களும் வழங்கி அன்னை தெரஸா கவுரவிக்கப்பட்டுள்ளார்.

பாடம்
அன்பின் அடிநாதமாகவும், இருபதாம் நூற்றாண்டின் பேரதிசியமாகவும் வாழ்ந்து மறைந்த அன்னை தெரஸா பெயரில் நமது தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகம் இயங்குவது பெருமிதத்துக்குரியது. மறைந்தும் மறையாமல் வாழ்கிற அன்னை தெரஸாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவர் கற்றுக்கொடுத்து விட்டுச்சென்ற அன்பு, அறம், சகிப்புத்தன்மையை நினைவில் கொள்ள வேண்டியது அனைவரின் கடமையாக உள்ளது.












Click it and Unblock the Notifications