ஆபீஸ் ஏசி மெஷினைக் கழற்றி அரசு ஆஸ்பத்திரியில் மாட்டிய கலெக்டர்.. குவிகிறது சபாஷ்!
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு கலெக்டர் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி. இந்தூர் நகரில் ஒரு அரசு ஊட்டச்சத்து மைய மருத்துவமனையில் கடும் வெப்பத்தால் நோயாளிகள் புழுங்கித் தவிப்பதைப் பார்த்து வேதனை அடைந்தார் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி.
என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் அதிரடியாக ஒரு நடவடிக்கையில் இறங்கினார். தனது அலுவலகத்தில் இருந்த ஏசி மெஷின், அலுவலக வளாகத்தில் இருந்த மேலும் சில ஏசி மெஷின்களைக் கழற்ற உத்தரவிட்டார் . பின்னர் அவற்றைக் கொண்டு போய் அந்த மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் வசதிக்காக பொருத்த உத்தரவிட்டார்.

அதிரடி
கலெக்டர் ஸ்வரோசிஷ் சோமவன்ஷியின் இந்த அதிரடி செயலால் வெயில் கொடுமையால் தகித்துக் கொண்டிருந்த குழந்தைகளும், பிற நோயாளிகளும், அவர்களது உறவினர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

ஹீரோவானார்
கலெக்டரின் இந்த செயல் அங்கு பெரும் வைரலாகப் பரவி ஒரே நாளில் மாநில அளவில் ஹீரோவாகி விட்டார் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. நோயாளிகள் நிறையப் பேர் இருந்தனர். குழந்தைகளும் இருந்தனர்.

வெயில் கொடுமை
அனைவருமே கடும் வெயிலால் பெரும் சிரமத்தை அனுபவித்து வந்தனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. எனவேதான் சற்றும் யோசிக்காமல் இந்தக் காரியத்தை செய்தேன்.
|
தற்காலிக தீர்வு
இப்போது ஏசி வந்து விட்டதால் ஓரளவுக்கு அவர்களது பிரச்சினை தீர்ந்துள்ளது. ஆனால் இது போதாது. நிரந்தர தீர்வுக்கு தற்போது வழி கண்டு கொண்டிருக்கிறேன். விரைவில் இந்தப் பிரச்சினை சரி செய்யப்படும் என்றார் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி.
|
பாராட்டு
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மின்சாரப் பிரச்சினை கடுமையாக உள்ளது. இதனால் அரசுக் கட்டடங்கள், மருத்துவமனைகளில் ஏசி மெஷின்களின் பயன்பாட்டைக் குறைத்து வருகின்றனர். இந்த நிலையில் நோயாளிகளின் வசதிக்காக தனது அலுவலக ஏசி மெஷின்களை மாவட்ட கலெக்டர் கழற்றி மாட்டியது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications