மத்திய பிரதேசத்தில் அரசு பணிகள் அனைத்தும் மண்ணின் மைந்தர்களுக்குதான்...முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்
போபால்: மத்திய பிரதேசத்தில் அரசு பணிகள் அனைத்தும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மாநிலங்களில் பிற மாநிலத்தவர் வேலைவாய்ப்பு பெறுவதற்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன. தமிழகத்திலும் அரசு பணிகள் தமிழக இளைஞர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் திருச்சியில் ரயில்வே பணிக்கு வடமாநிலத்தவர் பெரும்பான்மையோர் நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிராக திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை போராட்டங்களை நடத்தின.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் துறைகளில் சொந்த மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கின்றன. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வராக இருந்த கமல்நாத், தனியார்துறையில் மண்ணின் மைந்தர்களுக்கு 70% வேலைவாய்ப்பு வழங்கும் சட்டத்தை கொண்டுவந்தார்.
தற்போது மத்திய பிரதேச மாநில முதல்வராக இருக்கும் சிவராஜ்சிங் சவுகான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநில இளைஞர்களுக்கு மட்டுமே மத்திய பிரதேச அரசின் பணிகளை வழங்க வகை செய்யும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அறிவித்திருக்கிறார் சிவராஜ்சிங் சவுகான்.












Click it and Unblock the Notifications