பாரத ரத்னா விருதை விளம்பரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு... சச்சினுக்கு எதிரான மனு தள்ளுபடி
ஜபல்பூர் : பாரத ரத்னா விருதை சச்சின் டெண்டுல்கர் தான் நடிக்கும் விளம்பர படத்தில் தவறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது சொந்த ஊரான மும்பையில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு விடை பெற்றார். டெண்டுல்கர் கிரிக்கெட்டில் செய்த சாதனைக்காகவும், சேவைக்காகவும் அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றார்.

பாரத ரத்னா விருது பெற்றவர்கள் அதை தங்களது தனிப்பட்ட விளம்பரத்துக்காக பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இந்த நிலையில் பாரத ரத்னா விருதை சச்சின் டெண்டுல்கர் தான் நடிக்கும் விளம்பர படத்தில் தவறாக பயன்படுத்தி உள்ளார் என்று மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
போபாலை சேர்ந்த வி.கே. நஸ்வக் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். அதில் டெண்டுல்கரின் விளம்பரத்தில் பாரத ரத்னா விருது தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதனால் அந்த விருதை அவர் திரும்ப ஒப்படைக்கவோ அல்லது, இல்லையென்றால் அரசு அதை திரும்ப பெறவோ வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் எஸ்.கே. குப்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தனர். அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும், இந்த மனு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும் மனுதாரர் விரும்பினால் இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசை அணுகப்போவதாகவும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநுதிமன்றத்தை நாடப்போவதாகவும் வழக்கைத் தொடர்ந்த வி.கே. நஸ்வக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications