லஞ்சப்பணத்தில் ரூ 12 கோடிக்கு சொத்து சேர்த்த ம.பி. பியூன்... மாதச்சம்பளம் ரூ 22 ஆயிரம் மட்டுமே
போபால்: மத்தியப்பிரதேசத்தில் லஞ்சம் வாங்கியே சுமார் 12 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த அரசாங்க ஊழியர் ஒருவர் போலீசில் சிக்கியுள்ளார்.
மத்திய பிரதேச மாநில பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் குருகிரிபா சிங் சுஜ்லான். இவர் மீது லஞ்சப் புகார் எழுந்ததையடுத்து ‘லோக் ஆயுக்தா' போலீசார் அவரது வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது அங்கு அவருக்கு சொந்தமான 12 அடுக்கு மாடி வீடுகள், 4 வீடுகள், 4 காலிமனைகள், 2 கடைகள், பல பண்ணைகள் இருப்பதற்கான ஆவணங்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், குருகிரிபாவுக்கு 2 எஸ்.யூ.வி. சொகுசு கார்களும், ஒரு பஸ்சும் இருப்பதற்கான ஆவணங்களும் சிக்கின. அதேபோல், சோதனையில் சுமார் ரூ 12.5 லட்சம் ரொக்கப்பணமும், ரூ 27 ஆயிரம் மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் குருகிரிபாவின் வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சமும், ஆபரணங்களாக ரூ 16 லட்சம் மதிப்பிளானவையும் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அதேபோல், ரூ 35 லட்சத்திற்கான பேங்க் டெபாசிட்களும், ரூ31 லட்சத்திற்கான இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகளும் அவரது பெயரில் உள்ளனவாம்.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 12 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குருகிரிபா பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
லஞ்சப் புகாரில் சிக்கிய குருகிரிபாவுக்கு மாதச் சம்பளம் ரூ. 22 ஆயிரம் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications