ஜனநாயகத்தின் நிஜ காவலாளிகள்... கொளுத்தும் வெயிலில் 8 மணிநேர நடை.. அசத்தும் ம.பி. பழங்குடிகள்!
போபால்: வாக்களிக்க தவறாதீர்கள் என தேர்தல் ஆணையம் செய்யும் பிரசாரம் நிச்சயம் அவர்கள் காதுகளுக்கு எட்டி இருக்காது.. ஆனாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் உச்சிமலையில் இருந்து கால்கடுக்க நடந்து வந்து வாக்களித்துவிட்டு வீடு திரும்புகின்றனர் மத்திய பிரதேச பழங்குடிகள்.
மத்திய பிரதேச மாநிலம் பேட்டுல் பகுதியில் பந்தர்பானி மலைப்பகுதியில் கொர்கு பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு 300 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க 8கி.மீ தொலைவில் உள்ள லிம்லிகேடாவுக்கு வர வேண்டும். இந்த வாக்குச்சாவடிக்கு வர பாதைகள் எதுவும் இல்லை. மலைகாடுகளுக்கு நடுவேதான் நடந்து வர வேண்டும்.
இதனால் வாக்குப் பதிவு நாளின் போது ரொட்டி உள்ளிட்டவைகளை அதிகாலையிலேயே தயார் செய்து கொளுத்தும் 42 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாமல் 8 கி.மீ தொலைவு மலைப் பாதையில் நடந்தே வந்து வாக்களித்துவிட்டுச் செல்கின்றனர்.
இத்தனைக்கும் இந்த பழங்குடி மக்களுக்கு வேட்பாளர்கள் யார்? அவர்களது சின்னம் எது என்பதை பற்றி எல்லாம் கவலை இல்லை. பிரதமர் மோடியை தெரியும்.. காங்கிரஸ் தலைவர் ராகுலை தெரியும்.. அதிகபட்சமாக கமல்நாத்தை தெரியும்.. அவ்வளவுதான்.. ஆனாலும் வாக்களிக்க வேண்டியது கடமை என்பதை மட்டும் இந்த ஆதிகுடிகள் உணர்ந்தே இருக்கின்றனர்.
இவர்கள்தான் ஜனநாயகத்தின் நிஜ காவலாளிகள்!












Click it and Unblock the Notifications