விவசாயிகளை உயிருடன் அனுப்ப மத்திய அரசின் உடனடி நடவடிக்கை தேவை: திருச்சி சிவா
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை உயிருடன் அனுப்ப மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை உயிருடன் அனுப்ப மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். நாடே திரும்பி பார்க்கும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
டெல்லியில் கிட்டதட்ட ஒருமாதமாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமரை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்ற டெல்லி போலீசார் யாரோ ஒரு அதிகாரியிடம் விவசாயிகளின் கோரிக்கை மனுவை அளிக்குமாறு கூறியுள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த விவாசாயிகள் பிரதமர் அலுவலகம் எதிரே சாலையில் ஆடையின்றி உருண்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி திருச்சி சிவா விவசாயிகள் போராட்டத்தை நாடே திரும்பி பார்க்கும் நிலையில் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை விவசாயிகளை சந்திக்கவில்லை என்றும் திருச்சி சிவா தெரிவித்தார்.
மேலும் தமிழக விவசாயிகளை உயிருடன் அனுப்ப மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.