முகுல் ராய் வெறும் டிரெய்லர் தான்.. மெயின் பிக்ஸரே இனிதான்.. பாஜக மொத்தமா சரிய போகுது.. மம்தா அதிரடி
கொல்கத்தா: 'முகுல் ராய் நமது மகன். அவர் தன்னுடைய வீட்டுக்குதான் வந்துள்ளார்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜக பக்கம் தாவினார்கள்.

பாஜக தலைவர்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், நிர்வாகிகள் என பல முக்கிய தலைவர்கள் வரிசையாக பாஜகவுக்கு சென்றனர். ஆனால் தேர்தல் முடிவுகள் இதற்கு எதிர்மாறாக இருந்ததால் '' ஏன் இங்கு தேவையில்லாமல் வந்தோம்'' என்று பாஜகவுக்கு தாவிய தலைவர்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர்.

மீண்டும் வந்தார் முகுல் ராய்
இந்த சிந்தனை இன்று முதல் நடைமுறைக்கு வர தொடங்கி விட்டது. கடந்த 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு கரை ஒதுங்கிய மூத்த தலைவர் முகுல் ராய் இன்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார்.திரிணாமுல் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மம்தாவின் மருமகனும், தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் ஆரவாரத்துடன் தாய் கழகத்தில் மீண்டும் ஐக்கியமானார் முகுல் ராய்.

சீட்டு கட்டுபோல் சரிய போகிறது
மூத்த முகுல் ராய் வருகையால் மம்தா பானர்ஜி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் புன்னகை ததும்ப கூறுகையில், ' முகுல் ராய் நமது மகன். அவர் தன்னுடைய வீட்டுக்குதான் வந்துள்ளார்' என்றார். இப்போதுதான் முகுல் ராய் ஆரம்பித்து வைத்துள்ளார். இனிமேல் மேற்கு வங்க பாஜக சீட்டுக்கட்டு போல் சரியும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

சுவேந்து அதிகாரியுமா?
மம்தா பானர்ஜி கூறியது போல் பாஜகவில் இருக்கும் பலர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மம்தாவின் முன்னாள் நண்பனும், இந்நாள் எதிரியுமான சுவேந்து அதிகாரியும் மீண்டும் மம்தாவிடம் ஐக்கியமாக யோசனை செய்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications