முல்லைப் பெரியாறு அணை: கேரளாவின் மனு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
டெல்லி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என கடந்த மே மாதம் 7ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து, கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி கேரள அரசு சார்பில் மறுசீராய்வு மனு, தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினர், அணை தொடர்பான தொழில்நுட்பங்களை கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று இந்த மனுவை விசாரித்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த எந்த தடையும் இல்லை என்று கூறினர்.
கேரளா அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல, எந்த முகாந்திரமும் இல்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி தேக்க எந்தவித தடையும் இல்லை. இந்த தீர்ப்பு கேரளாவிற்கு பலத்த அடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் பலத்த மழை பெய்த காரணத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணை நீர்மட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. 36 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications