இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர்
மும்பை: மும்பை அருகே காவல் நிலையத்தில் வைத்து தனது உயரதிகாரியைச் சுட்டுக் கொன்று விட்டு துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அதே துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகேயுள்ள வோகேலா என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் சீனியர் இன்ஸ்பெக்டர் விலாஸ் ஜோசி என்பவருக்கும், துணை இன்ஸ்பெக்டர் திலிப் என்பவருக்கும் இடையே வருகைப்பதிவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த திலீப் தனது துப்பாக்கியால் ஜோசியை நோக்கி சுட்டுள்ளார். இதில் ஜோடிக்கு தோளிலும், மற்றொரு போலீசுக்கு தொடைப்பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு திலீப் தற்கொலை செய்து கொண்டார்.
படுகாயமடைந்த ஜோசி மற்றும் மற்றொரு போலீஸ்காரரை மற்ற அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோசி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு போலீஸ்காரருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் இரவுப் பணிக்கு திலீப் வரவில்லையாம். இதனால், அவரது வருகைப்பதிவேட்டில் ஆப்செண்ட் என ஜோசி குறித்துள்ளார். மறுநாள் பணிக்கு வந்த திலீப் இது தொடர்பாக ஜோசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக மும்பை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications