மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் இடிந்த பாலம்... 17 பேரின் சடலம் மீட்பு.. மேலும் 42 பேர் மாயம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

இதனிடையே, ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் சாவித்ரி ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் கடந்த செவ்வாய்க்கிழமை உடைந்து விழுந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அந்தப் பாலத்தின் அடிப்பகுதி வெள்ள அரிப்பால் சேதம் அடைந்தது உடைந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பாலத்தின் வழியாக சென்ற பல வாகனங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பயணிகளுடன் சென்ற 2 பேருந்துகள் உள்பட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டடதாக கூறப்படுகிறது. இதில், 42 பேர் சாவித்ரி ஆற்றில் மூழ்கி காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகனங்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு வரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications