மின் கசிவால் ஏற்படும் தீ விபத்துகள்... மும்பை முதலிடம் ! 2ம் இடத்தில் டெல்லி!!
மும்பை: மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துகளில் இந்திய நகரங்களில் மும்பை முதலிடத்தைப் பிடித்து மோசமான சாதனை படைத்துள்ளது. நாட்டில் ஏற்படும் பெரும்பாலான தீ விபத்துக்களுக்கு மின்கசிவே முக்கியக் காரணமாக அமைகின்றன. அவ்வாறு மின்கசிவுகள் மூலம் தீவிபத்து ஏற்படும் நகரங்களில் தலைநகர் டெல்லியைப் பின்னுக்குத் தள்ளி மும்பை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-

மின்கசிவு தீவிபத்துக்கள்...
கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை மொத்தம் 285 தீ விபத்துகள் மும்பையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்டு உள்ளன.

முதலிடம்...
இதில் அதிகப்பட்சமாக 2013-ம் ஆண்டில் 63 தீ விபத்துகளும், 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் தலா 55 தீ விபத்துகளும் நடந்துள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே மின்கசிவினால் அதிக தீ விபத்துகள் ஏற்பட்ட நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2ம் இடத்தில் டெல்லி...
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டெல்லி இருக்கிறது. இங்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை மொத்தம் 196 தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளன.

உயிரிழப்புகள்...
இதேபோல் தீ விபத்துகளில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையிலும் மும்பை தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 276 பேர், தீ விபத்துகளில் சிக்கி பலியாகியுள்ளனர்.

ஆந்திரா...
மாநிலங்கள் ரீதியாக பார்க்கும்போது, நாட்டிலேயே ஆந்திராவில் தான் மின் கசிவினால் அதிக அளவிலான தீ விபத்துக்கள் நடந்துள்ளன. இங்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை மொத்தம் 1,555 தீ விபத்துகள் ஏர்பட்டுள்ளன.

2ம் இடத்தில் குஜராத்...
ஆந்திராவிற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 1,321 தீ விபத்துகள் நடந்து உள்ளன. இந்தப்பட்டியலில் மராட்டியத்திற்கு 3-ம் இடம் கிடைத்து உள்ளது. இங்கு 1,075 தீ விபத்துகள் மின் கசிவினால் ஏற்பட்டு உள்ளன.

மோசமான பராமரிப்பு...
இது குறித்து மும்பை தீயணைப்புத்துறை கூடுதல் தலைமை அதிகாரி பி.எஸ். ராகந்தாலே கூறுகையில், ‘மோசமான பராமரிப்பு காரணமாகவே மின் கசிவினால் மின்சார வயர்கள் தீ பற்றி எரிந்து தீ விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன.

தரமற்ற பொருட்கள்...
மின்சார உபகரணங்கள் அருகில் குப்பைகளை குவித்து வைக்கப்படுவதால் தீ எளிதில் பரவுகின்றன. மேலும் தரமற்ற மின்சாதன பொருட்களாலும் மின் கசிவு ஏற்பட்டு விபத்துகள் அதிகரிக்கின்றன''எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications