சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் நீட்டா அம்பானி தேர்வு
டெல்லி: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீட்டா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெறுமை நீட்டா அம்பானிக்கு கிடைத்துள்ளது.
2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் செயல்திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான புதிய நடைமுறையின்படி இவர் தனிப்பட்ட முறையில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஐஓசி கூட்டம் வரும் ஆகஸ்ட் 2 முதல் 4 வரை பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளது. அப்போது ஐஓசி உறுப்பினராக நீட்டா அம்பானி முறைப்படி தேர்வு செய்யப்படுவார். இந்த உறுப்பினர் பதவிக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டால் 70 வயது வரை அந்த பதவியில் நீடா அம்பானி நீடிக்க முடியும்.
இந்த பதவிக்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமை நீட்டா அம்பானிக்கு கிடைத்துள்ளது. இவர் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக இந்த பெருமை கிடைத்துள்ளது. குறிப்பாக கால்பந்து மற்றும் கூடைபந்து போட்டியை அடிமட்ட நிலையில் இருந்து ஊக்குவிக்க முக்கிய காரணமாக இருப்பதால் இவரை தேர்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து நீட்டா அம்பானி கூறுகையில், ஐ.ஓ.சி. உறுப்பினர் பதவி வேட்பாளருக்கு என்னை தேர்வு செய்தது, உண்மையிலேயே எனக்கு கிடைத்த பெரிய மரியாதை. எனது பெயரை பரிந்துரை செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அடிமட்ட சமூகத்தினருக்கு விளையாட்டை எப்படி கொண்டு சேர்க்க முடியும் என்பதில் எனது நிறுவனம் செயல்படும் என்றார்.












Click it and Unblock the Notifications