மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட மும்பை மேயர்: விளக்கம் கேட்கும் பாஜக
மும்பை: சிவசேனா கட்சியைச் சேர்ந்த மும்பை மேயர் ஸ்னேஹால் அம்பேகர் பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு பேட்டி கொடுத்துள்ளார்.
சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் ஸ்னேஹால் அம்பேகர். மும்பை மேயராக உள்ளார். அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தலைக்கனம் இல்லாதவர். அதனாலேயே அவர் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கும். ஆனால் அவர் வழி ஹிட்லரி வழி போன்று உள்ளது என்றார்.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஸ்னேஹாலிடம் விளக்கம் கேட்டுள்ளது. ஸ்னேஹாலின் ஆதரவாளர்களோ, அவர் மோடியை புகழ்ந்து தான்
பேசியுள்ளாரே தவிர அவருக்கு எதிராக எதுவும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மும்பை நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில்,
மோடியின் பாணி ஹிட்லர் போன்று உள்ளது என்று நாங்கள் பல காலமாக கூறி வருகிறோம். அவர் குஜராத் முதல்வராக இருக்கும்போதே அனைத்து அதிகாரங்களையும் தன்னுடன் வைத்துக் கொண்டவர். தற்போது பிரதமராகியும் அதையே தான் செய்கிறார். அவர் நாங்கள் சொல்வதை தான் கேட்க மாட்டார். குறைந்தபட்சம் கூட்டணி
கட்சிகளின் கருத்தையாவது கேட்டு தனது வேலை பாணியை மாற்றலாமே என்றார்.
இது பற்றி பாஜக தலைவர் மனோஜ் கோதக் கூறுகையில், நான் ஸ்னேஹாலிடம் பேசினேன். அவர் மோடிக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என்றார். நான் ஹிட்லரின் பெயரையே கூறிவில்லை என்றார். இது குறித்து சிவசேனாவிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்றார்.