மும்பை போலிஸில் சிக்கிய "மியாவ் மியாவ் பேபி"...!
மும்பை: மும்பை போலீஸாரை கலக்க வந்த சசிகலா என்கிற பேபி படங்கரை ஒரு வழியாக மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மிகப் பெரிய போதைக் கும்பலின் தலைவிதான் இந்த பேபி.
இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. மும்பை முழுவதும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் நம்பர் ஒன் புள்ளியாக இருந்து வந்தவர் பேபி. இதன் மூலம் பல கோடி அளவுக்கு சொத்துக்களையும் குவித்துள்ளார். இவருக்கென்று மும்பையிலும், மகாராஷ்டிராவின் இதர பகுதிகளிலும் பல சொத்துக்கள் உள்ளன.

போலீஸாருடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டு சிக்காமல் தப்பி வந்த இவர் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கவே இவரைக் கைது செய்ய போலீஸார் களம் இறங்கினர். இதையடுத்து தலைமறைவானார் பேபி.
கடந்த ஒரு மாதமாக இவரை 10 தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். தற்போது சசிகலா சிக்கியுள்ளார். அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மியாவ் மியாவ்!
இவர் மெபட்ரின் என்ற போதைப் பொருளை விற்பனை செய்வதில் கில்லாடி ஆவார். இந்தப் போதைப் பொருளுக்கு மியாவ் மியாவ் என்று செல்லப் பெயர் உண்டு.
பேபி, மும்பை போலீஸ்காரர் தர்மராஜ் கலோகேவின் கள்ளக் காதலி ஆவார். பேபியின் போதை வியாபாரத்திற்கு தர்மராஜும் உடந்தையாக இருந்து வந்தார். அவரை கடந்த மாதம் போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 126 கிலோ போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பேபி தலைமறைவானார். தற்போது அவரை போலீஸார் பன்வெல் என்ற இடத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
சிந்துதுர்க் என்ற இடத்திலிருந்து பஸ் மூலம் மும்பைக்கு வந்து கொண்டிருந்தபோது பேபியை போலீஸார் கைது செய்தனர்.
பேபியிடம் போலீஸார் விசாரணை நடத்தும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications