மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு செப்.30-ல் தண்டனை அறிவிப்பு
மும்பை : ஜூலை 11, 2006-ம் ஆண்டு மும்பையை உலுக்கிய மின்சார ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை மகாராஷ்டிர நீதிமன்றம் இம்மாதம் 30-ம் தேதி அறிவிக்கிறது.
குற்றவாளிகள் 12 பேரில் 8 பேருக்கு மரண தண்டனையும், மீதி 4 பேருக்கு குறைந்தது 60 ஆண்டுகள் சிறைக்கான ஆயுள் தண்டனையும் விதிக்க அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

கமல் அன்சாரி, தன்வீர் அன்சாரி, ஃபைசல் ஷெய்க், எதீஷாம் சித்திகி, மொகமது அலி ஷெய்க், சாஜித் அன்சாரி, நவீத் கான், அசிப் பஷீர் கான் என்கிற ஜுனைத் ஆகிய 8 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மஜித் மொகமது ஷஃபி, முஸான்மில் ஷெய்க், சுஹைல் ஷெய்க், ஜமீர் ஷெய்க் ஆகியோருக்கு 60 ஆண்டுகளுக்குக் குறையாத ஆயுள் தண்டனை கோரப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் திருந்தவில்லை என்றும் எதிர்காலத்தில் திருந்தும் வாய்ப்பும் இல்லை என்றும் குற்றத்திற்காக அவர்கள் ஒரு போதும் வருந்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் தங்கள் வாதத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், முன்வைத்தனர்.
அவர்களது உடல்நலமின்மை, சமூக-பொருளாதார பின்னணிகள், சிறையில் கல்வி, குடும்பச் சூழல் ஆகியவை இவர்களது தீவிரத்தைக் குறைக்கும் அல்லது தடுக்கும் சூழ்நிலைகளாக பரிசீலிக்கப் பட முடியாதது என்றும் அரசுத் தரப்பு கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications